search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ப சிதம்பரம்
    X
    ப சிதம்பரம்

    இந்தியை போல் ஆங்கிலத்தையும் கற்க வலியுறுத்துங்கள்- ப. சிதம்பரம்

    மத்திய அரசு வேலைக்கு செல்லும் மற்ற மொழி நபர்களை விரைவாக இந்தியை கற்க சொல்வதுபோல், ஆங்கிலம் கற்க வலியுறுத்துங்கள் என்று ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
    மாநிலங்களவை எம்.பி.யும், மத்திய முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘இந்தி தெரியாத மத்திய அரசு ஊழியர்கள் விரைவாக இந்தி கற்றுக்கொள்ளும்போது, மத்திய அரசு பதவிகளில் இந்தி பேசும் நபர்கள் ஏன் ஆங்கிலம் கற்றுக்கொள்ள முடியாது?

    இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டுமே இந்தியாவின் அலுவலக மொழிகளாக இருப்பதற்கு மத்திய அரசு உண்மையிலேயே உறுதியுடன் இருந்தால், அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் இந்தி மற்றும் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.

    சென்னை விமான நிலையத்தில் திமுக எம்.பி. கனிமொழியின் விரும்பத்தகாத அனுபவம் அசாதாரணமானது அல்ல’’ என்று தெரிவித்துள்ளார்.

    கனிமொழி எம்.பி. ‘‘விமான நிலையத்தில் இருந்த சிஐஎஸ்எப் அதிகாரி ஒருவரை இந்தி தெரியாததால் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் என்னிடம் பேசும்படி அறிவுறுத்தினேன்.

    அதற்கு அவர் என்னை நீங்கள் இந்தியரா? என வினவினார். இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்ற நிலை உருவானது எப்போது?’’ என தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×