search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மந்திரி சுரேஷ்குமார்
    X
    மந்திரி சுரேஷ்குமார்

    கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் 10-ந்தேதி வெளியீடு: மந்திரி சுரேஷ்குமார் அறிவிப்பு

    கர்நாடகத்தில் 8½ லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வருகிற 10-ந் தேதி வெளியிடப்படும் என்று மந்திரி சுரேஷ்குமார் அறிவித்துள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் ஜூன் மாதம் இறுதியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளை தொடங்கி, கடந்த மாதம் (ஜூலை) முதல் வாரத்திற்குள் அரசு வெற்றிகரமாக நடத்தி முடித்து இருந்தது. விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகளை வெளியிட கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையில், சமூக வலைதளங்களில் இந்த தேர்வு முடிவுகள் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவிய வண்ணம் உள்ளது.

    மேலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் இன்று (சனிக்கிழமை) வெளியாக இருப்பதாகவும் தகவல் பரவியது. இந்த நிலையில், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் நேற்று காலையில் தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மந்திரி சுரேஷ்குமார் அறிவித்திருப்பதாவது:-

    கர்நாடகத்தில் கொரோனா பீதிக்கு மத்தியிலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளை அரசும், கல்வித்துறையும் வெற்றிகரமாக நடத்தி முடித்திருந்தது. இந்த தேர்வை 8½ லட்சம் மாணவ, மாணவிகள் எழுதி இருந்தார்கள். கடந்த மாதம் (ஜூலை) எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் நிறைவு பெற்றிருந்தது. அதன்பிறகு, விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடைபெற்றது. தற்போது தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு கல்வித்துறை அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வந்தது. வருகிற 10-ந் தேதி மதியம் 3 மணியளவில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது. மதியம் 3 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியானதும், இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

    அதன்படி, 4 இணையதளங்கள் மூலமாக மாணவ, மாணவிகள் தேர்வு முடிவுகளை பார்த்து அறிந்து கொள்ளலாம். கொரோனா பரவல் இருப்பதால் மாணவ, மாணவிகள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். மாணவ, மாணவிகளின் செல்போனுக்கும், அவர்களது தேர்வு முடிவுகள் குறுந்தகவல் அனுப்பி வைக்கப்படும். தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்காக பள்ளி, கல்வித்துறை எல்லா நடவடிக்கையும் எடுத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×