search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்போனை கையில் பிடித்து கொண்டு மகள் ஆன்-லைனில் பாடம் படிக்க உதவும் சரோஜினி.
    X
    செல்போனை கையில் பிடித்து கொண்டு மகள் ஆன்-லைனில் பாடம் படிக்க உதவும் சரோஜினி.

    தங்க கம்மல்களை விற்று மகளுக்கு செல்போன் வாங்கிய தேவதாசி பெண்

    மகளின் ஆன்-லைன் வகுப்புக்காக தங்க கம்மல்களை விற்று தேவதாசி பெண் ஒருவர் செல்போன் வாங்கி கொடுத்த சம்பவம் பெலகாவியில் அரங்கேறி உள்ளது.
    பெலகாவி :

    கதக் மாவட்டம் நரகுந்து தாலுகாவை சேர்ந்த ஒரு பெண் கடந்த சில தினங்களுக்கு முன்பு, குழந்தைகளின் ஆன்-லைன் கல்விக்காக தனது தாலிசங்கிலியை அடகு வைத்து டி.வி. வாங்கி கொடுத்து இருந்தார். இதுபோன்று தற்போது தங்க கம்மல்களை விற்று மகளின் ஆன்-லைன் வகுப்புக்காக ஒரு பெண் செல்போன் வாங்கி கொடுத்த சம்பவம் பெலகாவியில் அரங்கேறி உள்ளது. அதுபற்றிய விவரம் வருாறு:-

    பெலகாவி மாவட்டம் கோகாக் தாலுகா அங்கலகி கிராமத்தை சேர்ந்தவர் சரோஜினி பெவினகட்டி(வயது 62). தேவதாசி பெண்ணான இவருக்கு திருமணம் முடிந்து விட்டது. 21 வயதில் ஒரு மகனும், 16 வயதில் ஒரு மகளும் உள்ளனர். சரோஜினி தனது கணவர், மகன், மகளுடன் கடந்த சில ஆண்டுகளாக பெலகாவி டவுன் கிளப் சாலையில் குடிசை வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு சரோஜினியின் கணவர் இறந்துவிட்டார்.

    இதனால் சரோஜினியின் மகன் தான் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு விபத்தில் சரோஜினியின் மகன் சிக்கினார். இதனால் அவரால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவர் படுத்த படுக்கையாக வீட்டில் உள்ளார்.

    இதன்காரணமாக சரோஜினி தான் கூலி வேலைக்கு சென்று மகன், மகளை காப்பாற்றி வந்தார். சரோஜினியின் மகள் ரேணுகா தற்போது அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்ததால் சரோஜினிக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. இதனால் அவர் குடும்பத்தை நடத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதற்கிடையே கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளதால் தனியார் பள்ளிகள் தங்களது மாணவர்களுக்கு ஆன்-லைன் வகுப்புகளை எடுக்க ஆரம்பித்து விட்டன. அரசு பள்ளிகளும் சந்தன் டிவி மூலம் ஆன்-லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன.

    ஆனால் சரோஜினி வீட்டில் டி.வி., ஸ்மார்ட் போன் இல்லாததால் ரேணுகா ஆன்-லைன் வகுப்பில் கலந்து கொள்ள சிரமம் ஏற்பட்டது. இதுபற்றி ரேணுகா, சரோஜினியிடம் கூறி இருந்தார். இதையடுத்து தான் காதுகளில் அணிந்திருந்த தங்ககம்மல்களை ரூ.11 ஆயிரத்துக்கு விற்ற சரோஜினி, அதில் ரூ.7 ஆயிரத்திற்கு ஸ்மார்ட் போனை வாங்கி ரேணுகாவிடம் ஆன்-லைன் வகுப்புக்காக கொடுத்து உள்ளார். தற்போது செல்போனில் ஆன்-லைன் வகுப்புகள் மூலம் ரேணுகா பாடம் படித்து வருகிறார்.

    இதுகுறித்து சரோஜினி கூறும்போது, எனது மகள் ரேணுகா நன்றாக படிக்க கூடியவர். ஆனால் செல்போன், டி.வி. வசதி இல்லாததால் அவளால் ஆன்-லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள முடியவில்லை. மற்ற மாணவர்கள் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்கு சென்று ஆன்-லைன் வகுப்பில் படிக்கின்றனர். ஆனால் நான் தேவதாசி பெண் என்பதால், எனது மகளை சேர்த்து கொள்ள மறுத்து விடுகிறார்கள். இதனால் நான் காதுகளில் அணிந்திருந்த கம்மலை விற்று ஆன்-லைன் வகுப்புக்காக எனது மகளுக்கு செல்போன் வாங்கி கொடுத்தேன். தற்போது அவள் ஆன்-லைன் வகுப்பில் கலந்துகொண்டு படித்து வருகிறார். இது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றார். 
    Next Story
    ×