search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடிகர் சுஷாந்த் சிங், ஆதித்ய தாக்கரே
    X
    நடிகர் சுஷாந்த் சிங், ஆதித்ய தாக்கரே

    நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை: ஆதித்ய தாக்கரே

    ஒருவரின் மரணத்தில் இருந்து அரசியல் செய்வது மனிதாபிமானத்திற்கு எதிரானது. நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று மந்திரி ஆதித்ய தாக்கரே மறுப்பு தெரிவித்து உள்ளார்.
    மும்பை :

    34 வயது இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி மும்பை பாந்தி்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சினிமா தொழில் போட்டி காரணமாக இந்த தற்கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் சமீபத்தில் சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டியதாக பீகாரில் வசித்து வரும் சுஷாந்த் சிங்கின் தந்தை பாட்னா போலீசில் புகார் அளித்தார். அதில் இருந்து இந்த வழக்கு தினமும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    வழக்கை விசாரிப்பது யார்? என்பதில் மகராஷ்டிரா மற்றும் பீகார் மாநில அரசுகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் வழக்கு விசாரணையில், மகராஷ்டிரா முட்டுக்கட்டை போடுவதாக பீகார் அரசு குற்றம் சாட்டியதுடன், வழக்கை அதிரடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்தது.

    மகராஷ்டிரா முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா எம்.பி.யுமான நாராயண் ரானே, சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும், இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    இந்த பரபரப்புக்கு மத்தியில் மகராஷ்டிரா முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் மகனும், மாநில சுற்றுச்சூழல் மந்திரியுமான ஆதித்ய தாக்கரேவுக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பான தகவல்கள் வலைத்தளங்களில் வைரல் ஆகின.

    இந்தநிலையில் மந்திரி ஆதித்ய தாக்கரே தன் மீதான குற்சாட்டை மறுத்து கூறியிருப்பதாவது:-

    இந்தி திரையுலகம் மும்பையின் ஒரு அங்கமாகும். இது ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரமாக விளங்குகிறது. சினிமா தொழில் துறையை சேர்ந்த சிலருடன் எனக்கு தனிப்பட்ட உறவுகள் உள்ளன. இது எந்த வகையிலும் குற்றம் இல்லை.

    இதை வைத்து என்மீது பழிபோட முயற்சி செய்வது வேதனை அளிக்கிறது.

    நான் பால்தாக்கரேயின் பேரன். தாக்கரே குடும்பத்திற்கு தீங்கு விளைவிக்கும் எந்த செயலையும் ஒருபோதும் செய்ய மாட்டேன்.

    என் மீது பழிபோடுவது மிகவும் மலிவான மற்றும் அழுக்கு அரசியல். எங்களின் அரசியல் வெற்றியை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை. அவர்களில் வயிற்றெரிச்சலும், விரக்தியும் தான் தற்போது குற்றச்சாட்டாக மாறியுள்ளது.

    ஒருவரின் மரணத்தில் இருந்து அரசியல் செய்வது மனிதாபிமானத்திற்கு எதிரானது. இந்த வழக்கில் எனக்கு எந்த வகையிலும் சம்பந்தம் இல்லை.

    இந்த குற்றச்சாட்டை வைத்து என்மீதும் எனது குடும்பத்தின் மீதும் அவதூறு பரப்பலாம் என்ற மாயையில் யாரும் இருக்கவேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே சுஷாந்த் சிங் மேலாளராக பணியாற்றிவந்த திஷா செலியன் கடந்த ஜூன் 8-ந் தேதி, மும்பை மலாடில் உள்ள ஒரு கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது.

    இவரது தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக பா.ஜனதா தலைவர் நாராயண் ரானே குற்றம் சாட்டினார். மேலும் அவரது இறப்பு குறித்து பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களிலும் உலவி வருகின்றன.

    இந்த நிலையில் திஷா செலியர் தற்கொலை குறித்து ஏதேனும் தகவல்களோ, ஆதாரங்களோ இருந்தால் சமர்ப்பிக்குமாறு மும்பை போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    Next Story
    ×