search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுஷாந்த் சிங் ராஜ்புத்
    X
    சுஷாந்த் சிங் ராஜ்புத்

    பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு - சிபிஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை

    பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் தந்தை கேட்டுக் கொண்டதற்கிணங்க, சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை செய்துள்ளது.
    பாட்னா:

    பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் அவரது தந்தை விரும்பினால் சி.பி.ஐ. விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் நேற்று தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, நிதிஷ்குமார் கூறுகையில், அவருக்கு என்ன நேர்ந்தாலும் அது சரியல்ல. இது அரசியலும் அல்ல, பீகார் காவல்துறை தனது கடமையை நிறைவேற்றி வருகிறது. எங்கள் டிஜிபி அவர்களிடம் பேசுவார்.  பாட்னா காவல் கண்காணிப்பாளர் பினாய் திவாரி மும்பையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பீகார் டிஜிபி அங்குள்ள அதிகாரிகளுடன் பேசுவார். அவருக்கு என்ன நடந்தது (பினாய் திவாரி) என்பது தெரியவில்லை. இதில் அரசியல் இல்லை.

    இந்த வழக்கு பாட்னா காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிரா காவல்துறை, பீகார் காவல்துறையுடன் இணைந்து ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே, பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமாரை டெலிபோனில் தொடர்பு கொண்ட சுஷாந்த் சிங் தந்தை, இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    இந்நிலையில், பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தை கேட்டுக் கொண்டதற்கிணங்க, சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை செய்துள்ளது என ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×