search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லடாக்
    X
    லடாக்

    லடாக்கில் படைகளை விலக்கும் நடவடிக்கை : இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் 5-வது சுற்று பேச்சுவார்த்தை

    லடாக்கில் இந்திய-சீன ராணுவத்துக்கு இடையே நடந்த மோதலை தொடர்ந்து அங்கு படைகளை விலக்குவது தொடர்பாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் நேற்று 5-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
    புதுடெல்லி:

    லடாக்கின் கிழக்கே உள்ள பங்கோங் சோ, கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் கடந்த மே மாதம் ஊடுருவியதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் பதற்றம் நிலவி வந்த நிலையில் ஜூன் 15-ந்தேதி இரு நாட்டு வீரர்களும் பயங்கரமாக மோதிக்கொண்டனர்.

    இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். சீன தரப்பிலும் 35 வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் இருநாட்டு எல்லை முழுவதும் போர் மேகம் சூழ்ந்தது. இரு தரப்பும் எல்லையில் படைகளை குவித்ததால் பெரும் பதற்றம் நிலவியது.

    எனவே அங்கு படைகளை விலக்கி அமைதியை மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்துவது தொடர்பாக இரு தரப்பும் ராணுவ மற்றும் தூதரக ரீதியான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டன. அடுத்தடுத்து நடந்த இந்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டது. பின்னர் இருநாட்டு எல்லை விவகாரங்களுக்கான பிரதிநிதிகளான இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் சீன வெளியுறவு மந்திரி இருவரும் கடந்த மாதம் 5-ந்தேதி சுமார் 2 மணி நேரம் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 6-ந்தேதி முதல் கிழக்கு லடாக்கில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இரு தரப்பும் படைகளை விலக்கி வருகின்றன. இதில் ஹாட்ஸ்பிரிங், கல்வான் பள்ளத்தாக்கு, கோக்ரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சீனாவும், இந்தியாவும் படைகளை முழுமையாக விலக்கி உள்ளன. எனினும் பங்கோங்சோ உள்ளிட்ட இன்னும் சில பகுதிகளில் படை விலக்கல் முற்றுப்பெறவில்லை.

    இந்த நிலையில் இருநாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான 5-வது சுற்று பேச்சுவார்த்தை நேற்று மீண்டும் நடந்தது. உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் அமைந்துள்ள மோல்டா என்ற இடத்தில் சீன எல்லைக்குள் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில் லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங், சீனா தரப்பில் மேஜர் ஜெனரல் லியு லின் ஆகியோர் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர்.

    இந்த பேச்சுவார்த்தையில், பங்கோங் சோ, தேப்சாங் உள்ளிட்ட அனைத்து சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்தும் கால வரையறை மற்றும் சரிபார்த்தலுடன் கூடிய படை விலக்கல் நடவடிக்கையை இறுதி செய்யவும், உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதிக்கு பின்புறமுள்ள நிலைகளில் அதிக எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டுள்ள படைகள் மற்றும் ஆயுதங்களை வாபஸ் பெறவும் இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டது.

    மேலும் எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து விரைவில் படைகளை முழுவதுமாக விலக்குவது குறித்து இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தின.
    Next Story
    ×