search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரி தொழில்நுட்ப பூங்காக்கான பூமி பூஜையை எடியூரப்பா நிலத்தை தோண்டி தொடங்கி வைத்தபோது எடுத்தபடம்.
    X
    உயிரி தொழில்நுட்ப பூங்காக்கான பூமி பூஜையை எடியூரப்பா நிலத்தை தோண்டி தொடங்கி வைத்தபோது எடுத்தபடம்.

    ரூ.5 ஆயிரம் கோடியில் உயிரி அறிவியல் பூங்கா: கட்டுமான பணிகளை தொடங்கி வைத்த எடியூரப்பா

    பெங்களூருவில் ரூ.5,000 கோடி செலவில் உயிரி அறிவியல் பூங்கா கட்டுமான பணிகளை முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைத்துள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடக அரசின் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் உயிரி தொழில்நுட்பத்துறை சார்பில் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் ரூ.5 ஆயிரம் கோடியில் உயிரி அறிவியல் பூங்கா அமைக்கப்படும் கட்டுமான பணிகளுக்கு பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா நேரில் கலந்து கொண்டு, பூமி பூஜையை நிறைவேற்றி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பத்துறை பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பு பெருக்கத்தில் முக்கிய பங்காற்றுகிறது. அதனால் இந்த துறைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும். கர்நாடகத்தில் தொழில் முதலீடுகளுக்கு தேவையான சுற்றுச்சூழலை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம். இதற்காக நாங்கள் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளோம்.

    வணிகம் மற்றும் தொழில் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். பெங்களூருவில் அமைக்கப்படும் இந்த உயிரி அறிவியல் பூங்கா, உயிரி தொழில்நுட்பத்துறையின் அளவை மேலும் அதிகரிக்க உதவும். இந்த பூங்கா பெங்களூருவுக்கு ஒரு சிறப்பான நன்கொடையாக இருக்கும் என்று கருதுகிறேன். பெங்களூரு இந்தியாவில் உயிரி தொழில்நுட்பத்துறையின் தலைநகராக விளங்குகிறது.

    இந்த திட்டத்திற்கு மாநில அரசு முதல் கட்டமாக ரூ.150 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்த பூங்காவில் 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொழில் தொடங்கும். இதன் மூலம் 50 ஆயிரம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்த திட்டம், கர்நாடகத்தின் பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றும். உயிரி தொழில்நுட்பத்துறையில் தற்போது மாநிலத்தில் 380 நிறுவனங்கள் மற்றும் 200 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

    ஆசியாவில் உயிரி தொழில்நுட்பத்துறை சந்தையில் கர்நாடகத்தின் பங்கு 9 தவீதமாகவும், இந்தியாவில் 35 சதவீதமாகவும் உள்ளது. இந்த சதவீதம் வரும் நாட்களில் அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் கர்நாடகம் உயிரி தொழில்நுட்பத்துறையின் குவிமையமாக திகழும். இதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அரசு தயாராக உள்ளது.

    இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பேசுகையில், “20 ஆண்டுகளுக்கு திட்டமிடப்பட்ட உயிரி அறிவியல் பூங்கா அமைக்க தற்போது நேரம் வந்துள்ளது. கர்நாடகத்தில் ஏற்கனவே உயிரி தொழில்நுட்பத்துறை வலுவாக உள்ளது. இந்த நிலையில் இந்த உயிரி அறிவியல் பூங்கா அதற்கு மேலும் வலு சேர்ப்பதாக இருக்கும். ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஒரே கூரையின் கீழ் நடைபெறும். இந்த பூங்கா செயல்பாட்டுக்கு வரும்போது, உலக வரைபடத்தில் பெங்களூருவின் பெருமை மேலும் அதிகரிக்கும். நில சீர்திருத்த சட்டம், வேளாண்மை சந்தைகள் சட்டத்தில் திருத்தம் செய்து சீர்திருத்ததை கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம் கர்நாடகம் தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக மாறியுள்ளது“ என்றார்.

    பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் 90 லட்சம் சதுரஅடி பரப்பளவில் அமையும் இந்த பூங்கா 52.27 ஏக்கர் பரப்பளவை கொண்டுள்ளது. இந்த திட்டம் அரசு-தனியார் பங்களிப்பில் அமைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×