search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடுவானில் எரிபொருள் நிரப்பும் ரபேல் விமானங்கள்
    X
    நடுவானில் எரிபொருள் நிரப்பும் ரபேல் விமானங்கள்

    இந்தியா வரும் வழியில் நடுவானில் எரிபொருள் நிரப்பிய ரபேல் போர் விமானங்கள்

    இந்தியா வரும் வழியில் ரபேல் போர் விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்பப்பட்டது.
    புதுடெல்லி:

    கடந்த 2016 செப்டம்பர் மாதத்தில் ரூ.58 ஆயிரம் கோடி செலவில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக இந்தியா- பிரான்சு அரசுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த 36 ரபேல் ஜெட் விமானங்களில் 30 போர் விமானங்கள் மற்றும் 6 பயிற்சி விமானங்கள் அடங்கும்.

    இந்த ஒப்பந்தத்தின் முதல் படியாக கடந்த ஆண்டு அக்டோபர் 8-ந்தேதி, முதலாவது ரபேல் போர் விமானத்தை பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் பிரான்சு அரசிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

    கடந்த ஏப்ரல் மாத இறுதியில் புதிய ரபேல் போர் விமானம் ஒன்று இந்திய விமானப்படை வசம் பிரான்சு அரசாங்கம் ஒப்படைத்துள்ளது.  இந்திய விமானப்படையிடம் மேலும் 4 போர் விமானங்களை கூடிய விரைவில் அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.

    இந்நிலையில், மே மாதம் வர விருந்த ரஃபேல் விமானங்களின் வருகை,கொரோனா ஊரடங்கால் தாமதமானது. இதனிடையே முதல்கட்டமாக பிரான்ஸ் நாட்டில் இருந்து அதி நவீன 5 ரபேல் போர் விமானங்கள், நேற்று பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டன.

    பிரான்சில் இருந்து 7 ஆயிரம் கிலோ மீட்டர்கள் தூரம் பயணித்து ரபேல் போர் விமானங்கள் இந்தியா வர உள்ளன. இந்த பயணத்தில் நேற்று இரவு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள விமான தளத்தில் மட்டும் விமானங்கள் தரையிறக்கப்பட்டன.

    இதையடுத்து தனது பயணத்தை மீண்டும் தொடங்கிய ரபோல் விமானங்கள் தொடர்ந்து இந்தியா நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது.

    இந்நிலையில், பயண தூரம் அதிகம் என்பதால் ரபேல் போர் விமானங்களுக்கு நடு வானிலேயே எரிபொருள் நிரப்பப்பட்டது. ரபேல் போர் விமானங்களின் பயணத்தின் போது உரிய உதவிகளை வழங்குவதற்காக பிரான்ஸ் நாட்டின் விமானப்படை விமானங்களும் இந்த பயணத்தில் உடன் வருகின்றன.

    தற்போது ரபேல் போர் விமானத்தில் எரிபொருள் குறைந்ததையடுத்து நடுவானிலேயே பிரான்ஸ் விமானப்படை விமானம் மூலம் ரபேல் போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டது. இந்த தகவலை இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

    பிரான்சில் இருந்து வரும் ரபேல் போர் விமானங்கள் நாளை அரியானாவின் அம்பாலாவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தை வந்தடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×