search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    எந்த ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்படமாட்டார்கள் - ஏர் இந்தியா

    பிற விமான நிறுவனங்கள் போன்று தங்கள் ஊழியர்கள் யாரும் பணி நீக்கம் செய்யப்படமாட்டார்கள் ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

    இதனால் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு பயணிகள் விமான சேவை மிகமிகக்குறைவான எண்ணிக்கையில் செயல்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.  

    இந்த நஷ்டத்தால் செலவை குறைக்கும் நடவடிக்கைகளில் விமான நிறுவனங்கள் இறங்கியுள்ளது. இதனால் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. 

    இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான இண்டிகோ தனது 10 சதவிகித ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

    இந்நிலையில், கொரோனா காரணமாக மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனமும் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.
    அந்நிறுவனம் செலவை குறைக்கும் நடவடிக்கையாக ஊழியர்களின் மாதாந்திர படிகளை குறைத்து உள்ளது.

    அதன்படி அனைத்து பொது வகை அதிகாரிகளுக்கும் 50 சதவீதம் வரையும், பொது வகை ஊழியர்கள் மற்றும் ஆப்ரேட்டர்களுக்கு 30 சதவீதம் வரையும் படிகள் குறைக்கப்பட்டு உள்ளன.

    இதற்கிடையில், ஏர் இந்தியா மண்டல தலைமை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில் ஊழியர்களின் செயல்திறன் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அறிக்கையாக தாக்கல் செய்ய கேட்டுக்கொண்டது. 

    இதனால் தனியார் நிறுவனங்களில் நடைபெற்ற பணி நீக்கம் போன்று ஏர் இந்தியாவிலும் ஊழியர்கள் பலர் பணி நீக்கம் செய்யப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டது.

    இந்நிலையில், பிற விமான நிறுவனங்களை போன்று ஏர் இந்தியா தனது ஊழியர்கள் யாரையும் பணி நீக்கம் செய்யாது என  அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 

    இதனால் ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

    Next Story
    ×