search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிரவ் மோடி
    X
    நிரவ் மோடி

    நிரவ் மோடியின் ரூ.329 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் - அமலாக்கத்துறை அதிரடி

    நிரவ் மோடியின் ரூ.329 கோடி மதிப்பிலான சொத்துகளை தலைமறைவு நிதி மோசடியாளா்கள் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி(48). மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 
    இதற்கிடையே, நிரவ் மோடி லண்டனில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இந்திய அரசு எடுத்த நடவடிக்கையின் பேரில் நிரவ் மோடியை லண்டன் போலீசார் கடந்த ஆண்டு மார்ச் 19-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான முயற்சிகளை அமலாக்கத் துறை மேற்கொண்டுள்ளது.

    இந்நிலையில், வைர வியாபாரி நிரவ் மோடியின் ரூ.329 கோடி மதிப்பிலான சொத்துக்களை தலைமறைவு நிதி மோசடியாளா்கள் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

    இதுதொடா்பாக அமலாக்கத் துறை  வெளியிட்ட அறிக்கையில், நிரவ் மோடிக்கு சொந்தமாக வோர்லி மும்பையின் சமுத்ர மகால் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்த 4 வீடுகள், கடலோரப் பகுதி பண்ணை வீடு, அலிபாக் பகுதியில் உள்ள நிலம், ஜெய்சால்மரில் உள்ள காற்றாலை, லண்டனில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு, பங்குகள் மற்றும் வங்கி வைப்புத் தொகை என மொத்தம் ரூ.329.66 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இவை அனைத்தும் தலைமறைவு நிதி மோசடியாளா்கள் சட்டம் 2018-இன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன என கூறப்பட்டுள்ளது.

    இதுவரை நிரவ் மோடிக்குச் சொந்தமான ரூ.2,348 கோடி மதிப்பிலான சொத்துகள் நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×