search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எச்1பி விசா
    X
    எச்1பி விசா

    இந்திய ஐ.டி. நிறுவனங்களை அமெரிக்காவின் எச்1பி விசா நிறுத்தம் பாதிக்காது - கிரிசில் தகவல்

    அமெரிக்காவின் எச்1பி விசா நிறுத்தம் இந்திய ஐ.டி. நிறுவனங்களை பாதிக்காது என இந்திய கடன் தர மற்றும் தகவல் நிறுவனமான கிரிசில் தெரிவித்துள்ளது
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அந்த நாடு ‘எச்1பி’ விசா வழங்கி வருகிறது. இந்த ‘எச்1பி’ விசா வழக்கமாக 3 ஆண்டுகள் வரையே நிர்ணயித்து வழங்கப்படும். பிறகு தேவைப்பட்டால் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து கொள்ள முடியும்.

     இந்த விசாவை உலக நாடுகளில் அதிக அளவு இந்தியர்களும், சீனர்களும்தான் பெற்று வருகின்றனர். குறிப்பாக ஐ.டி. என்றழைக்கப்படுகிற தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றுகிறவர்கள் மத்தியில் இந்த விசாவுக்கு தனி மவுசு உள்ளது.

    இதனிடையே டிரம்ப் ஜனாதிபதி பதவிக்கு வந்தது முதல் “அமெரிக்கா அமெரிக்க மக்களுக்கே” என்ற கொள்கையை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார். அந்த அடிப்படையில் அமெரிக்க மக்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் ‘எச்1பி’ விசாவில் பல்வேறு கட்டுப்பாடுகளை அவர் கொண்டு வந்தார். இந்த நிலையில் உலகில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

    டிரம்ப், ஜோ பிடன்


    கொரோனா பரவல் காரணமாக அந்நாட்டில் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் வேலையை இழந்து வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வந்து வேலை செய்வதற்காக வழங்கப்படும் ‘எச்1பி’, ‘எச்2பி’, ‘எல்’ மற்றும் ‘ஜே’ விசாக்கள் வழங்குவதை இந்த ஆண்டு இறுதி வரை நிறுத்திவைக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரும், முன்னாள் துணை அதிபருமான ஜோ பிடன், தேர்தலில் வெற்றி பெற்று அதிபர் ஆனால் எச்-1 பி விசா தடையை நீக்குவதாக உறுதி அளித்துள்ளார். அவர் (டிரம்ப்) இந்த ஆண்டின் இறுதி வரை எச் -1 பி விசாக்களை ரத்து செய்தார், அது எனது நிர்வாகத்தில் இருக்காது என்றும் ஜோ பிடன் கூறியிருந்தார்.

    இந்நிலையில் அமெரிக்காவின் எச்1பி விசா நிறுத்தம் இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ஒரு அறிக்கையை இந்திய கடன் தர மற்றும் தகவல் நிறுவனமான  கிரிசில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்கா எச்1பி விசாவை  நிறுத்தியுள்ளது இந்திய ஐடி நிறுவனங்களின் வருவாயில் ரூ.1200 கோடி அளவுக்கு குறைக்கும். எனினும்  இந்திய ஐடி நிறுவனங்களின் வருவாயின் ஒட்டு மொத்த லாபத்துடன் ஒப்பிடும்போது இது வெறும் 0.25 சதவீதம் முதல் 0.30 சதவீதம்  வரை மட்டுமே இருக்கும்.  இதனடிப்படையில் பார்க்கும் போது இந்திய ஐடி நிறுவனங்களுக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.  அமெரிக்காவில் செயல்படும் இந்திய ஐ.டி. நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே அந்நாட்டுப் பணியாளர்களை அதிகம் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கிவிட்டதாகவும் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. எனவே இதனால் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

    அதே நேரத்தில் நாம் பார்க்கும் போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்திய ஐ.டி. நிறுவனங்களின் வருவாய் 2.50 சதவீதம் அளவுக்கு குறைய வாய்ப்பு உள்ளதாக கிரிசில் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×