search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமாரசாமி
    X
    குமாரசாமி

    கொரோனா நோயாளிகள் தெருவில் உயிரிழக்கும் நிலை ஏற்படும்: குமாரசாமி எச்சரிக்கை

    மந்திரிகள் ஒற்றுமையாக செயல்படாவிட்டால் கொரோனா நோயாளிகள் தெருவில் உயிரிழக்கும் நிலை ஏற்படும் என்று குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் படுக்கைகள் பற்றாக்குறையால், கொரோனா நோயாளிகளை மருத்துவமனைகள் அனுமதிக்காமல் நிராகரிக்கும் சம்பவங்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. பொதுமக்களை பாதுகாப்பதில் கர்நாடக அரசு தோல்வி அடைந்துவிட்டது. முதல்-மந்திரி மற்றும் மந்திரிகள் கடந்த 3 மாத அருமையான நேரத்தை வெறும் பேச்சில் வீணாக்கிவிட்டனர்.

    கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதால், ஒன்றும் செய்ய முடியாமல் மந்திரிகள் விழிபிதுங்கி நிற்கிறார்கள். அண்டை மாநிலமான கேரளா கொரோனாவை தடுப்பதில் வெற்றிகரமான நிலையை அடைந்துள்ளது. ஆனால் அந்த மாதிரியை பயன்படுத்தாமல் மந்திரிகள் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்து நேரத்தை வீணடித்தனர். எதுவும் செய்யவில்லை.

    மந்திரிகள் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், கர்நாடக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக அரசு குறிப்பாக மந்திரிகள் ஒற்றுமையாக செயல்படாவிட்டால், கொரோனா நோயாளிகள் தெருவில் விழுந்து உயிரிழக்கும் நிலை ஏற்படும். ஏற்கனவே அந்த நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைக்காமல் அலைந்து திரிந்த இதயத்தை நொறுக்கும் சம்பவங்களை பார்த்துள்ளோம்.

    கொரோனாவை தடுப்பதில் நான் ஏற்கனவே அரசுக்கு ஆலோசனைகளை வழங்கினேன். அதை அமல்படுத்த அரசு நடவடிக்கை வேண்டும். அரசியல் செய்ய இது சரியான தருணம் அல்ல என்பதை அனைவரும் உணர்ந்து செயலாற்ற வேண்டியது அவசியம்.

    இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×