search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிஎஸ்டி
    X
    ஜிஎஸ்டி

    ஜூன் மாதத்தில் ரூ.90,917 கோடி ஜிஎஸ்டி வசூல் -முந்தைய மாதத்தில் இருந்து 46 சதவீதம் உயர்வு

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி வசூல் 72 சதவீதம் குறைந்திருப்பதாக மத்திய நிதியமைச்சகம் கூறி உள்ளது.
    புதுடெல்லி:

    சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஒரே பொருட்களுக்கு பல்வேறு இடங்களில் வரி விதிக்கப்படும் நிலை மாறி, ஒரே வரியாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொருட்களின் விலையும் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

    ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டபோது அரசுக்கு மாத வருவாய் சராசரியாக ரூ.98 ஆயிரத்து 114 கோடியாக இருந்தது. பின்னர், கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், வரி வருவாயும் மெல்ல மெல்ல அதிகரித்தபடி இருந்தது. 

    ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தொழில்துறை முடங்கியதால் மார்ச் மாதத்தில் இருந்து ஜிஎஸ்டி வரி வருவாய் குறையத் தொடங்கியது.

    தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு தொழில் நிறுவனங்கள் செயல்படத் தொடங்கி உள்ள நிலையில், வரி வருவாயும் சற்று உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், ஜி.எஸ்.டி. வரி வருவாய் குறித்து மத்திய நிதியமைச்சகம் இன்று செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    ஜூன் மாதத்தில் 90,917 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூலாகி உள்ளது. இதில் மத்திய ஜி.எஸ்.டி. ரூ.18,980 கோடி, மாநில ஜி.எஸ்.டி. ரூ.23,970 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.40,302கோடி, கூடுதல் ‘செஸ்’ வரி ரூ.7,665 கோடி அடங்கும்.

    ஜிஎஸ்டி வசூல் முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது ஜூன் மாதத்தில் 46 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த உயர்வானது, 68 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கிற்கு பிறகு வணிக நடவடிக்கைகள் மீண்டு வருவதை காட்டுகிறது. இருப்பினும், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வசூலிக்கப்பட்ட வருவாயான ரூ.99,939 கோடியை ஒப்பிடுகையில் 9 சதவீதம் குறைவாகும்.

    ஏப்ரல் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் ரூ.32,294 கோடியாக இருந்தது. இது மார்ச் 25ம் தேதி முதல் 68 நாட்களுக்கான ஊரடங்கு காலத்தின், முதல் முழு மாத வசூல் ஆகும். இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ஒப்பிடுகையில் 72 சதவீதம் குறைவு. 

    அதன்பின்னர் மே மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாய் மேலும் அதிகரித்து, 62,009 கோடி ரூபாயாக இருந்தது. இருந்தாலும், இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் வசூலிக்கப்பட்ட வருவாயை விட 38 சதவீதம் குறைவு.

    இவ்வாறு நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×