search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீப்பிடித்து எரியும் எண்ணெய் வயல்
    X
    தீப்பிடித்து எரியும் எண்ணெய் வயல்

    அசாமில் பற்றி எரியும் எண்ணெய் வயல்- 1600 குடும்பங்கள் வெளியேற்றம்

    அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள எண்ணெய் வயலில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, சுற்று வட்டாரங்களில் வசித்த 1600 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன.
    கவுகாத்தி:

    அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டம் பக்ஜான் பகுதியில் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் வயலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 14 நாட்களாக எரிவாயு கசிவு ஏற்பட்டு வந்தது.
    இதனையடுத்து சிங்கப்பூரை சேர்ந்த எண்ணெய் வயல் நிபுணர்கள், நேற்று இந்த எண்ணெய் வயலை பார்வையிட்டு எரிவாயு கசிவை சரி செய்யும் பணியில் ஈடுபடத் தொடங்கினர். அப்போது பிற்பகலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் எண்ணெய் வயலில் இருந்த அனைவரும் வெளியேறினர்.

    கொழுந்துவிட்டு எரியும் தீ

    தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதால் அப்பகுதியை சுற்றி வசிக்கும் சுமார் 1600 குடும்பங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். தீ விபத்தில் ஏராளமான தாவரங்கள் மற்றும் பல்வேறு வீடுகள் தீயில் கருகின. அருகில் உள்ள கிராமங்களுக்கும் தீ பரவிய நிலையல், இதுவரை 6 பேர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓஎன்ஜிசியின் ஒரு தீயணைப்பு வீரரும் காயமடைந்துள்ளார்.

    தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து எரிவாயுக் கசிவை சரி செய்யுமாறு மத்திய அரசுக்கு மாநில முதல்வர் சர்பானந்த சோனோவால் கோரிக்கை வைத்துள்ளார். விபத்து குறித்து மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி தர்மேந்திர பிரதானுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

    தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் மாநில அரசின் உயர் அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை பார்வையிட்டு வருகின்றனர். விரைவில் நிலைமை கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விபத்து ஏற்பட்டிருக்கும் எண்ணெய் வயல், தலைநகர் கவுகாத்தியில் இருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. தீ விபத்து தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் இணைய தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

    இந்த எண்ணெய் வயலுக்கு 3 கிலோ மீட்டர் சுற்றளவில், திப்ரு சைகோவா தேசிய உயிரியல் பூங்கா மற்றும் உயிரின பாதுகாப்பு பூங்காக்கள் அமைந்துள்ளன. விபத்தால் இவற்றின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

    வயல் வெளிகள் மற்றும் தேயிலை தோட்டங்களிலும் எரிவாயுவின் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அங்கு பணியாற்றும் தொழிலாளர்களும், விவசாயிகளும் கவலை தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×