search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிரியர் காந்தராஜூ, கொரோனா ஊரடங்கிற்கு மத்தியில் புதுப்பிக்கப்பட்ட பள்ளி வகுப்பறையின் புதிய தோற்றம்.
    X
    ஆசிரியர் காந்தராஜூ, கொரோனா ஊரடங்கிற்கு மத்தியில் புதுப்பிக்கப்பட்ட பள்ளி வகுப்பறையின் புதிய தோற்றம்.

    கொரோனா ஊரடங்கிற்கு மத்தியில் பாழடைந்த பள்ளியை புதுப்பித்த ஆசிரியர்

    கொரோனா ஊரடங்கிற்கு மத்தியில் பாழடைந்த பள்ளியை புதுப்பித்த ஆசிரியரை கிராம மக்கள் பாராட்டி வருகிறார்கள்.
    சிக்கமகளூரு :

    சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா பாலூர் அருகே சுங்கசலே என்ற குக்கிராமம் உள்ளது. இங்கு அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் காந்தராஜூ என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த பள்ளிக் கட்டிடம் பாழடைந்து கிடந்தது. இந்த நிலையில் அந்த பள்ளிக் கூடத்தை புதுப்பிக்க காந்தராஜூ முயற்சி செய்தார். இதுபற்றி அவர் மாவட்ட பஞ்சாயத்து அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

    இதைதொடர்ந்து அந்த பள்ளியை புதுப்பிக்க ரூ.50 ஆயிரத்தை மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகம் ஒதுக்கியது. இதற்கிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளியை புதுப்பிக்க தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் ஊரடங்கிற்கு மத்தியிலும் காந்தராஜூ தினமும் பள்ளிக்கு வந்து பாழடைந்த கட்டிடத்தை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டார்.

    தற்போது அந்த பள்ளி பளிச் என புதுப்பொலிவுடன் காட்சி தருகிறது. பள்ளி சுவர்களில் வண்ணங்கள் தீட்டியதுடன், பூச்செடிகள் வரையப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் முன்பு தரையில் அமர்ந்து படித்து வந்தனர். தற்போது மாணவர்களுக்காக நாற்காலிகள், மேஜைகள் வசதி செய்யப்பட்டுள்ளது.

    மாணவர்களின் படைப்பாற்றலை ஆதரிக்கும் படங்களையும் ஆசிரியர் காந்தராஜூ சுவரில் வரைந்துள்ளார். மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகம் வழங்கிய தொகையுடன் தனது சொந்த பணம் ரூ.40 ஆயிரத்தையும் பள்ளியை புதுப்பிக்க காந்தராஜூ செலவிட்டுள்ளார். இதற்காக பள்ளி அபிவிருத்தி, கண்காணிப்பு குழு மற்றும் பெற்றோர்களும் உதவி செய்துள்ளனர்.

    காந்தராஜூ கடந்த 14 ஆண்டுகளாக இதே பள்ளியில் ஆசிரியராக இருந்து வருகிறார். ஆங்கிலத் திறன், ஓவியம், சுய ஒழுக்கம் போன்றவை குறித்து மாணவர்களுக்கு அவர் பயிற்சி அளித்து வருகிறார். மேலும் அவர் கிராம மக்களின் உதவியுடன் சாலை பழுது பார்த்தல் மற்றும் கிராமத்தை சுத்தம் செய்தல், பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தல் போன்ற பணிகளையும் மேற்கொண்டுள்ளார். இந்த பள்ளியில் தற்போது 12 மாணவ-மாணவிகள் மட்டுமே படித்து வருகிறார்கள். மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்த அக்கம்பக்கத்து கிராமங்களுக்கும் சென்று அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். ஊரடங்கிற்கு மத்தியிலும் பாழடைந்த அரசுப் பள்ளியை புதுப்பொலிவுடன் மாற்றியதற்காக கிராம மக்கள் அவரைப் பாராட்டுகிறார்கள்.
    Next Story
    ×