search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா சோதனை
    X
    கொரோனா சோதனை

    கர்நாடகத்தில் ஒரே நாளில் 515 பேருக்கு கொரோனா வைரஸ்: தொற்று அதிகரிப்பால் மக்கள் பீதி

    கர்நாடகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரே நாளில் 515 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ் தொற்று அதிகரித்துள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
    பெங்களூரு :

    கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 4,261 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 515 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 482 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,776 ஆக உயர்ந்துள்ளது. நேற்று யாரும் மரணம் அடையவில்லை. மாநிலத்தில் இதுவரை 59 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 1,688 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3,088 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    புதிதாக கொரோனா பாதித்தவர்களில் உடுப்பியில் 204 பேர், கலபுரகியில் 42 பேர், பெங்களூரு நகரில் 10 பேர், யாதகிரியில் 74 பேர், மண்டியாவில் 13 பேர், பெலகாவியில் 36 பேர், பீதரில் 39 பேர், ஹாசன், சிக்பள்ளாப்பூர், தார்வாரில் தலா 3 பேர், விஜயாப்புராவில் 53 பேர்,தட்சிண கன்னடாவில் 8 பேர், உத்தர கன்னடாவில் 7 பேர், தாவணகெரே, பாகல்கோட்டை, பல்லாரி, கோலாரில் தலா ஒருவர், பெங்களூரு புறநகரில் 12 பேர், ஹாவேரி, ராமநகரில் தலா 2 பேர் உள்ளனர்.

    மாநிலத்தில் இதுவரை 3 லட்சத்து 60 ஆயிரத்து 720 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 13 ஆயிரத்து 627 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 36 ஆயிரத்து 787 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.”

    இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    கர்நாடகத்தில் நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக ஒரே நாளில் 515 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் நாளுக்குள் நாள் வைரஸ் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடலோர கர்நாடகத்தில் உடுப்பி, உத்தர கன்னடா, தட்சின கன்னடா, வட கர்நாடகத்தில் ராய்ச்சூர், கலபுரகி, யாதகிரி, பீதர், விஜயாப்புரா ஆகிய மாவட்டங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

    கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 500-ஐ தாண்டியுள்ளது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் பெங்களூருவை பொறுத்தவரையில் இதுவரை கொரோனா பரவல் என்பது மற்ற பெருநகரங்களுடன் ஒப்பிடுகையில் மிகுந்த கட்டுக்குள் உள்ளது. மாநிலத்தின் பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்தாலும், மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பெங்களூருவில் வைரஸ் தொற்று பரவல் குறைவாக இருப்பது, அரசுக்கு சற்று நிம்மதியை கொடுத்து உள்ளது.

    அடுத்து வரும் நாட்களில் கர்நாடகத்தில் கொரோனா பரவல் என்பது மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் பொதுமக்கள், தேவையின்றி வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் தனது டுவிட்டர் பதிவில், “பெங்களூருவில் மக்கள்தொகை 1.20 கோடி. கடந்த 2 மாதங்களாக இங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 424 (நேற்று முன்தினம் வரை) ஆக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×