search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பையில் பெய்த பலத்த மழை
    X
    மும்பையில் பெய்த பலத்த மழை

    ‘நிசர்கா’ புயலால் 2-வது நாளாக பலத்த மழை: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

    நிசர்கா புயலால் நேற்று 2-வது நாளாக மகராஷ்டிராவில் மும்பை உள்பட பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. புயலுக்கு பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.
    மும்பை :

    அரபிக்கடலில் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக மாறி நேற்று முன்தினம் சுமார் 110 கி.மீ. வேகத்தில் ராய்காட் மாவட்டம் அலிபாக் பகுதியில் கரையை கடந்தது. ‘நிசர்கா' என பெயரிடப்பட்டு இருந்த இந்த புயலால் ராய்காட் மாவட்டம் பலத்த சேதத்தை சந்தித்தது. இந்த மாவட்டத்தில் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. வீட்டின் மேற்கூரைகள் காற்றில் அடித்து செல்லப்பட்டன.

    இதேபோல அருகே உள்ள மும்பை, தானே, பால்கர், ரத்னகிரி, சிந்துதுர்க் ஆகிய கடலோர மாவட்டங்களும் சூறாவளி காற்று மற்றும் மழையால் சேதத்தை சந்தித்தன. புனேயில் பலத்த மழை பெய்தது.

    மகராஷ்டிராவில் கடலோர மாவட்டங்களை புரட்டி எடுத்த நிசர்கா புயல் வலுவிழந்து நேற்று அதிகாலை மேற்கு விதர்பா மாவட்டங்களை நோக்கி சென்றது. பின்னர் மேலும் வலுவிழந்து கிழக்கு- வடமேற்கு திசையை நோக்கி சென்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    இதற்கிடையே நிசர்கா புயலின் காரணமாக நேற்று 2-வது நாளாக மும்பை, தானே, நவிமும்பை உள்பட மராட்டியத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மும்பையை பொறுத்தவரை காலை நேரத்தில் தாதர், தாராவி, சயான், ஒர்லி, சாந்தாகுருஸ், கொலபா, காந்திவிலி, மலாடு, விக்ரோலி, காட்கோபர் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் வெள்ளம் தேங்கியது.

    வழக்கமாக மும்பையில் மழைநீர் தேங்கும் கிங்சர்க்கிள், தாதர் இந்து மாதா உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. சயான் போலீஸ் நிலையமும் தண்ணீரில் தத்தளித்தது. மும்பையில் பெய்த பலத்த மழை காரணமாக நேற்று காலை அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே சென்ற மக்கள் பாதிக்கப்பட்டனர். கிங்சர்க்கிள் பகுதியில் வெள்ளம் தேங்கியதால் அந்த வழியாக செல்ல இருந்த பெஸ்ட் பஸ்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. காட்கோபர் ராம்நகரில் சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

    தானே பிளவர் வெலி குடியிருப்பு பகுதியில் மரம் சரிந்து அங்கு இருந்த காரின் மீது விழுந்தது. இதனால் கார் சேதமடைந்தது. தானே ஜாம்பலி நாக்கா மார்க்கெட் பகுதியில் ராட்சத மரம் வேரோடு சரிந்து அங்கு இருந்த வீட்டின் மீது விழுந்தது. இதனால் வீட்டின் மேற்கூரை கடுமையாக சேதமடைந்தது. ேமலும் வீட்டில் இருந்த மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் உடைந்தன. எனினும் இந்த விபத்துகளில் அதிர்ஷ்டவசமாக உயிர் இழப்பு அல்லது யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தானே போிடர் மேலாண்மை பிரிவினர் தெரிவித்தனர்.

    இதேபோல சாலையில் மரம் விழுந்ததால் தானே கோகலே ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தானே பாஞ்ச்பாக்டி பகுதியில் மரம் விழுந்து அந்த வழியாக சென்ற ஆட்டோ முற்றிலுமாக நொறுங்கியது. எனினும் அதில் இருந்த டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பால்கர், புனே, நாசிக் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது.

    நிசர்கா விதர்பா நோக்கி நகர்ந்ததால் மக்களை வெயில் வாட்டி வதைத்து வந்த வடக்கு மராட்டிய பகுதிகளான துலே, நந்துர்புர், அகோலா, சந்திராப்பூர், நாக்பூர், பண்டாரா உள்ளிட்ட பகுதியில் மழை பெய்தது.

    இதற்கிடையே புயலால் சூறாவளி காற்று மற்றும் மழை காரணமாக கடந்த 2 நாட்களாக 5 பேர் உயிரிழந்து உள்ளனர். இதில் முதல் நாளில் ராய்காட் மாவட்டம் உமேத் கிராமத்தில் மின்மாற்றி சரிந்து விழுந்து தசரத் பாபு வாக்மரே (வயது 58) என்பவர் உயிரிழந்தார். புனே மாவட்டம் ஹவேலி தாலுகா மோகர்வாடி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் மோகர் (52) என்பவர் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார். மேலும் புனே மாவட்டம் கெட் தாலுகாவில் மஞ்சபாய் (65) என்ற மூதாட்டி பலியானார். 3 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் மஞ்சபாயின் மகன் நாராயண் (35) என்பவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    நாசிக் மாவட்டம் ரகுரி கிராமத்தில் கோழிப்பண்ணையில் வெள்ளம் புகுந்தபோது மின்சாரம் தாக்கி யசோதா பவார் (45) என்ற பெண் பலியானார்.

    இதற்கிடையே மும்பை பெருநகர பகுதியில் நேற்று காலை 9.30 மணி முதல் 11.30 வரை பதிவான மழை அளவு விவரம் வருமாறு:-

    சாந்தாகுருஸ் - 32.2 மி.மீ., கொலபா - 45.4 மி.மீ., பாந்திரா 30.9 மி.மீ., அந்தேரி - 21 மி.மீ., ஒர்லி - 46 மி.மீ., தாதர் - 42 மி.மீ., வடலா - 59 மி.மீ., தாரவி - 40 மி.மீ., கன்சோலி - 70 மி.மீ., ஐரோலி - 60.8 மி.மீ., வாஷி - 41 மி.மீ.

    மதியத்துக்கு பிறகும் மும்பையில் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்தது.
    Next Story
    ×