search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
    X
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

    டெல்லியின் எல்லைகள் ஒரு வாரத்திற்கு மூடப்படும்- கெஜ்ரிவால் அறிவிப்பு

    டெல்லியின் எல்லைகள் ஒரு வாரத்திற்கு மூடப்பட்டு சீல் வைக்கப்படும் என்றும், எல்லைகளை திறப்பது குறித்து பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளை வழங்கலாம் என்றும் முதல்வர் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.
    புதுடெல்லி:

    கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த போதிலும், மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஊரடங்கு தொடர்பான பல்வேறு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன. இன்று தொடங்கி உள்ள ஐந்தாம் கட்ட ஊரடங்கில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற இடங்களில் கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    ஜூன் 1-ம் தேதி முதல் 30ம் தேதி வரை படிப்படியாக இயல்பு நிலையை கொண்டு வருவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

    இந்நிலையில், ஊரடங்கு தளர்வுகள் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:-

    டெல்லியில் இப்போது வரை அனுமதிக்கப்பட்டவற்றைத் தவிர, முடிதிருத்தும் கடைகள், சலூன்கள் மற்றும் அனைத்து கடைகளையும் திறக்கலாம். ஆனால் அழகு நிலையங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். ஆட்டோ மற்றும் பிற வாகனங்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை தொடர்பான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

    டெல்லியின் எல்லைகள் ஒரு வாரம் மூடப்பட்டு சீல் வைக்கப்படும். அனுமதி அட்டை உள்ளவர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் டெல்லிக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். எல்லைகளை மீண்டும் திறப்பது தொடர்பாக பொதுமக்கள் வெள்ளிக்கிழமைக்குள் தங்கள் ஆலோசனைகளை வழங்கலாம்.

    உத்தரபிரதேசம் மற்றும் அரியானாவுடன் எல்லைகளைத் திறப்பது குறித்து, வாட்ஸ்அப் எண் 8800007722, delhicm.suggestions@gmail.com என்ற மெயில் மூலமாகவும், 1031 என்ற எண்ணை தொடர்பு கொண்டும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் ஆலோசனைகளை தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×