search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரிசர்வ் வங்கி ஆளுநர்
    X
    ரிசர்வ் வங்கி ஆளுநர்

    கடன் தவணைகளை செலுத்த மேலும் 3 மாதம் அவகாசம்- ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

    வங்கிக் கடன் தவணைகளை செலுத்துவதற்கு கூடுதலாக 3 மாத காலம் அவகாசம் வழங்கப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    கொரோனாவால் நிலைகுலைந்துள்ள இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தவும் ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார திட்டங்களை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். குறிப்பாக தொழில் நிறுவனங்கள் மற்றும் விவசாயிகளுக்கான புதிய கடன்கள், புலம்பெயர் தொழிலாளர் பாதுகாப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. பல முக்கிய பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் பங்களிப்பு அளிக்கப்படும் என்று நிதி மந்திரி குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வரி வசூலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 17% ஆக குறைந்துள்ளது. உற்பத்தி நடவடிக்கைகள் 21% குறைந்துள்ளது. முக்கிய தொழில் நிறுவனங்களின் உற்பத்தி 6.5% அளவிற்கு சரிந்துள்ளது.

    வேளாண் பணிகள் பாதிக்கப்பட்டிருக்கும் சமயத்திலும், உணவு தானிய உற்பத்தி 3.7% அதிகரித்திருப்பது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. 2020-21 நிதியாண்டில் ஏப்ரல் 1 முதல் அந்நிய செலாவணி இருப்பு 9.2 பில்லியன் அதிகரித்துள்ளது. மே 15 வரை, அந்நிய செலாவணி இருப்பு 487 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.

    2020-21 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி எதிர்மறையான அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, நிதியாண்டின் இரண்டாம் பாதியில் சில முன்னேற்றம் இருக்கும்.

    வங்கிக்கடன் தவணைகளை செலுத்த கூடுதலாக மூன்று மாத அவகாசம் (ஆகஸ்ட் 31ம் தேதி வரை) வழங்கப்படுகிறது. மேலும் 3 மாதங்களுக்கு சிறு தொழில் கடன் வழங்கவும் ஏப்றாடுசெய்யப்பட்டுள்ளது. இதற்காக 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    ரெப்போ வட்டி விகிதம் 4.40 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதேபோல் ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டதன்மூலம் வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைய வாய்ப்பு உள்ளது.
    Next Story
    ×