search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரியங்கா காந்தி
    X
    பிரியங்கா காந்தி

    நெடுஞ்சாலையில் வரிசை கட்டி நிற்கும் பேருந்துகள் - பிரியங்காவை புகழ் பாடும் நெட்டிசன்கள்

    நெடுஞ்சாலையில் வரிசை கட்டி நிற்கும் பேருந்துகள் அடங்கிய புகைப்படத்தை கொண்டு நெட்டிசன்கள் பிரியங்காவை புகழ் பாடி வருகின்றனர்.



    உத்திர பிரதேச மாநிலத்தில் தங்கி வேலை பார்த்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயிரம் பேருந்துகளை இயக்க அம்மாநில அரசிடம் பிரியங்கா காந்தி சில நாட்களுக்கு முன் அனுமதி கோரியிருந்தார். நேற்று அதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான பேருந்துகள் வரிசையாக நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் பதிவுகளில் புகைப்படத்தில் உள்ள பேருந்துகளை பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்திருக்கிறார் என கூறப்பட்டுள்ளது. மேலும் இவற்றை இயக்க யோகி ஆதித்யநாத் அனுமதியளிக்கவில்லை என கூறப்படுகிறது.

    வைரல் புகைப்படம்

    ஆய்வு செய்ததில், வைரல் புகைப்படத்திற்கும் பிரியங்கா காந்தி அல்லது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரியவந்துள்ளது. உண்மையில் வைரல் புகைப்படம் கடந்த ஆண்டு நடைபெற்ற கும்ப மேளாவின் போது உத்திர பிரதேச அரசு 500 பேருந்துகளை கொண்டு நடத்திய அணிவகுப்பின் போது எடுக்கப்பட்டது ஆகும்.

    கும்ப மேளாவுக்கென ஏற்பாடு செய்யப்பட்ட 500 பேருந்துகளை கும்ப மேளா பதாகைகளுடன் அணி வகுத்தது கின்னஸ் உலக சாதனையாக அமைந்தது. அப்போது இதுபற்றிய செய்தி தொகுப்புகளை பல்வேறு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டன. அந்த வகையில் வைரல் புகைப்படத்தில் உள்ள பேருந்துகளை பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்யவில்லை என உறுதியாகிவிட்டது. 

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×