search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்
    X
    பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்

    சத்தீஸ்கரில் மேலும் 3 மாதங்களுக்கு 144 தடை நீட்டிப்பு

    சத்தீஸ்கர் மாநிலத்தில் மேலும் 3 மாதங்களுக்கு 144 தடை உத்தரவை நீட்டித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
    ராய்ப்பூர்:

    கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு மே 31ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டு, நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற இடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும் ஊரடங்கை கடுமையாக அமல்படுத்தும் வகையில் மாநில அரசுகள் சார்பில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் 144 தடை உத்தரவு சூழ்நிலைக்கு ஏற்ப நீட்டிக்கப்படுகிறது.

    அவ்வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் மேலும் 3 மாதங்களுக்கு 144 தடை உத்தரவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில உள்துறை அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

    144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதிலும், பொது இடங்களில் 4 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. மே 31ம் தேதி வரை ரெஸ்டாரன்டுகள், ஓட்டல் பார்கள், கிளப்புகள் மூடப்படும். விளையாட்டு வளாகங்கள், ஸ்டேடியங்களும் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 92 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், 59 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×