search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய கரன்சி
    X
    இந்திய கரன்சி

    ஊரடங்கு அமலால் மாநிலங்களுக்கு வருவாய் 80 சதவிகிதம் வரை இழப்பு

    ஊரடங்கு காரணமாக மாநில அரசுகளுக்கு 80 சதவிகிதம் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களும், மத்திய அரசிடம் கூடுதலாக நிதி தரவேண்டும் என்று கேட்டு வருகின்றன.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும், கடந்த மாதம் 24-ந் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. வருகிற 3-ந் தேதி வரை இது நீடிக்கும். ஊரடங்கு காரணமாக மத்திய-மாநில அரசுகளுக்கு கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    அதாவது தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், சேவை அமைப்புகள் போன்றவற்றின் மூலம் வரவேண்டிய வரி வசூலாகவில்லை. வேறுவித கட்டணங்கள் மற்றும் வருவாய்கள் போன்றவையும் நின்று விட்டன.

    இதன் காரணமாக மாநில அரசுகளுக்கு 80 சதவிகிதம் வரை வருவாய் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. எனவே அனைத்து மாநிலங்களும், மத்திய அரசிடம் கூடுதலாக நிதி தரவேண்டும் என்று கேட்டு வருகின்றன.

    ஏற்கனவே மாநில அரசுகள் கூடுதல் நிதி கேட்டு மத்திய நிதி அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தன. முன்னதாக மத்திய அரசு பல்வேறு மாநிலங்களுக்கும் உதவி வழங்கியிருந்தது. ஆனாலும் அது போதவில்லை.

    கடுமையான வருவாய் இழப்பு காரணமாக அரசு ஊழியர்களுக்கு இந்த மாதத்திற்கான சம்பளத்தினைகூட வழங்க முடியாமல், மாநில அரசுகள் தவிக்கின்றன. எனவே மத்திய அரசு உடனடியாக கூடுதல் நிதியை வழங்கவேண்டும் என்று கூறி வருகின்றனர்.

    பிரதமர் மோடி

    பிரதமர் நரேந்திர மோடி இன்று மாநில முதல் மந்திரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது முதல் மந்திரிகள் கூடுதல் நிதி கேட்டு பிரதமரிடம் வற்புறுத்தினர்.

    கேரள நிதி மந்திரி தாமஸ் ஐசக் கூறும்போது கேரளாவில் இந்த மாதம் ரூ.250 கோடி மட்டுமே வருவாயை திரட்ட முடிந்துள்ளது. மத்திய அரசு எங்களுக்கு கொடுக்கும் நிதியை சேர்த்தால் ரூ. 2 ஆயிரம் கோடிதான் எங்களிடம் இருக்கும். ஆனால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மட்டுமே சுமார் ரூ. 2500 கோடி தேவைப்படுகிறது. என்ன செய்வது என்று தெரியவில்லை.

    அரசு கருவூலத்தையே மூடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்று கூறினார்.

    பஞ்சாப் மாநிலத்தில் நிலைமை இதைவிட மோசமாக இருக்கிறது. அங்கு ரூ. 7301 கோடி தேவைப்படுகிறது. ஆனால் மொத்த வருவாய் 3360 கோடிதான் உள்ளது. எனவே அந்த மாநிலமும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.

    உத்தரபிரதேசத்தில் 70 சதவிகிதம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் ரூ. 2200 கோடி அரசுக்கு தேவைப்படும். ஆனால் எந்த வருவாயும் இல்லை என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

    பீகார் மாநிலத்தில் 35 சதவிகிதம் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளனர்.

    மத்திய பிரதேசத்தில் சுமார் ரூ. 4000 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளனர். ஆனால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கே ரூ. 6000 கோடி தேவைப்படுகிறது.

    இவ்வாறு ஒவ்வொரு மாநிலமும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. மத்திய அரசு உதவவில்லை என்றால், கடுமையான சிக்கலில் மாட்டிக் கொள்வோம் என்று மாநில அரசுகள் கூறி வருகின்றனர்.

    Next Story
    ×