search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐதராபாத் மருத்துவருமான டாக்டர் நாகேஷ்வர் ரெட்டி
    X
    ஐதராபாத் மருத்துவருமான டாக்டர் நாகேஷ்வர் ரெட்டி

    32 டிகிரி வெயிலில் கொரோனா அழிந்து விடும் - ஐதராபாத் டாக்டர் நம்பிக்கை

    கொரோனா வைரசால் மக்கள் பீதி அடைய வேண்டாம், 32 டிகிரி வெயிலில் கொரோனா அழிந்து விடும் என ஐதராபாத் மருத்துவருமான டாக்டர் நாகேஷ்வர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    ஐதராபாத்:

    கொரோனா வைரஸ் மனித சமுதாயத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.  இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது.

    வெப்ப நிலை


    இதுவரை 1139 பேரை இந்த வைரஸ் தாக்கி உள்ளது. 27 பேர் வரை பலியாகி உள்ளனர். மராட்டியம், கேரள மாநிலத்தில் தான் அதிகமான பாதிப்பு இருக்கிறது. இங்கு 200 க்கும் மேற்பட்டோருக்கு இந்த நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. ஊரடங்கு உத்தரவால் மக்கள் மன அழுத்தத்தில் உள்ளனர்.

    இந்த நிலையில் கொரோனா வைரசால் மக்கள் பீதி அடைய வேண்டாம், இதைக் கட்டுப்படுத்த முடியும் என்று ஐதராபாத் டாக்டர் ஒருவர் தெரிவித்து உள்ளார். ஆசிய இரப்பை குடலியல் அமைப்பின் தலைவரும், ஐதராபாத் மருத்துவருமான டாக்டர் நாகேஷ்வர் ரெட்டி இதுதொடர்பாக கூறியதாவது;- கொரோனா வைரஸ் சீனாவில் தான் தோன்றியது. வுகானில் உள்ள கடலுணவு சந்தையில் இருந்து இந்த வைரஸ் பரவி இருக்கிறது.

    அதைத்தொடர்ந்து இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவுக்கு பரவத் தொடங்கியது. 2 மற்றும் 3 வாரங்களுக்குப் பிறகு இந்த வைரஸ் இந்தியாவுக்கு மறைமுகமாக வரத்தொடங்கியது.

    இதைத் தொடர்ந்து நாங்கள் இந்த வைரஸ் குறித்து ஆய்வு செய்தோம். இது ஆர்.என். ஏ. வகையைச் சேர்ந்த வைரஸ் ஆகும். இந்த வைரஸ் வலுவாக இருக்கும்போதே பரவத்தொடங்கியது. சீனாவில் தோன்றிய போதும், மற்ற நாடுகளுக்கு பரவ தொடங்கியபோதும் அதன் மரபணு மாறியதை நாங்கள் கண்டறிந்தோம்.

    சீனா, இத்தாலி, அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள இந்த வைரசின் மரபணுவுக்கும், இந்தியாவில் உள்ள வைரஸ் மரபணுவுக்கும் வேறுபாடு இருக்கிறது. 'ஸ்பைக்' புரதத்தில் மாறுபாடு இருக்கிறது. அங்கு வலுவாக இருந்தது. இந்தியாவில் பலவீனமாக இருக்கிறது.

    இத்தாலி, சீனா, அமெரிக்காவில் பரவிய வைரஸ் வீரியம் மிக்கதாக இருந்ததால் அதிகமான பாதிப்பு இருந்தது. மேலும் இத்தாலியில் 70 வயதுக்கு மேற்பட்டவர்களே இறந்தனர். அவர்கள் பெரும்பாலும் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள்.

    இந்தியாவில் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது. இந்த வைரஸ் பலவீனமானது என்பதால் மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம். கொரோனா வைரஸை நம்மால் கட்டுப்படுத்த முடியும். இந்தியாவில் இந்த வைரஸ் தொற்று அதிகமாக இருக்காது.

    இந்தியாவில் ஏப்ரல் மாதம் சராசரியாக 32 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும். இந்த வெப்பத்திற்கு கொரோனா வைரஸ் நீண்ட நாள் இருக்காது. இதனால் நாம் அதை கட்டுப்படுத்திவிடலாம். 21 நாள் ஊரடங்கு உத்தரவுக்கு பிறகு நீட்டிப்பு இருக்காது என்றே என்னுடைய கணிப்பாகும். 2 மற்றும் மூன்று வாரங்கள் போதுமானது. சமூக பரவலை தடுக்க வேண்டும் என்று நினைத்தால் சில வாரங்கள் நீட்டிப்பு இருக்கலாம்.

    இவ்வாறு டாக்டர் நாகேஷ்வர் ரெட்டி கூறியுள்ளார்.

    Next Story
    ×