search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ஏப்ரல்-மே மாதத்தில் உச்சநிலை அடையும்: தமிழ்நாட்டில் 1 லட்சம் பேரை கொரோனா தாக்கும் அபாயம்

    வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் உச்சநிலையை அடையும் என்றும் தமிழ்நாட்டில் 1 லட்சம் பேர் வரை தாக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கோரோனா நோய் தாக்குதல் எப்படி இருக்கும் என்று நோய் இயக்கம் பொருளாதார கொள்கை என்ற அமைப்பு அமெரிக்காவின் ஜாம்ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பட்டியல் ஒன்றை தயாரித்து உள்ளது.

    அதாவது இப்போது ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள மக்கள் தொகை, ஆரம்ப கட்டத்தில் நோய் தாக்கியவர்கள் எண்ணிக்கை போன்ற விவரங்களை கணக்கிட்டு அதன் அடிப்படையில் புள்ளி விவரம் முறையில் இந்த பட்டியலை உருவாக்கி இருக்கிறார்கள்.

    அதில், வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நோய் தாக்குதல் உச்சநிலையை அடையும் என்று கூறியிருக்கிறார்கள். 3 கோடியே 90 லட்சம் மக்கள் கொண்ட தெலுங்கானாவில் 39 பேருக்கும், 12 கோடியே 60 லட்சம் மக்கள் தொகை கொண்ட மகாராஷ்டிராவில் 107 பேருக்கும், 8 கோடியே 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் 18 பேருக்கும் நோய் தாக்கி உள்ளது.

    இதேபோல ஒவ்வொரு மாநிலத்திலும் தாக்கியுள்ள புள்ளி விவரங்கள் அடிப்படையில் இந்த கணக்கீட்டை உருவாக்கி உள்ளனர்.

    இதன்படி நாடு முழுவதும் 12 லட்சத்தில் இருந்து 25 லட்சம் பேர் வரை நோய் தாக்குதலுக்கு ஆளாக வாய்ப்பு இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டை பொறுத்தவரை 60 ஆயிரம் பேர் வரை நோய் தாக்கப்பட்டு ஆஸ்பத்திரி செல்லும் நிலை ஏற்படலாம். மே மாதம் இந்த நோய் தாக்குதல் உச்சத்தில் இருக்கும். நிலைமை மோசமானால் 1 லட்சம் பேர் வரை அப்போது பாதிக்கப்படக்கூடும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

    மக்கள் வெளியே நடமாடுவதை குறைத்துக் கொண்டால் நோய் தாக்குதல் 75 சதவீதம் வரை குறைவதற்கும் வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர்.

    எனவே மக்கள் வெளியே நடமாடுவதை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும். ஒருவருக்கு ஒருவர் தொடர்பு துண்டித்தாலே நோய் பரவுதல் பெரும்பாலும் நின்றுவிடும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் நோய் தாக்கம் தொடர்பாக விரிவான அறிக்கையை அந்த அமைப்பிடம் இருந்து கேட்டிருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியிருக்கிறார்.

    இதுசம்பந்தமாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி கூறும்போது, மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பை துண்டிப்பது ஒட்டுமொத்த முடக்கத்தை விட நல்ல பலனை தரும் என்று கூறியுள்ளார்.
    Next Story
    ×