search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விசாகப்பட்டினம் வந்திறங்கிய இந்திய மாணவர்கள்
    X
    விசாகப்பட்டினம் வந்திறங்கிய இந்திய மாணவர்கள்

    மலேசியாவில் தவித்த தமிழக மாணவர்கள் உள்பட 185 பேர் இந்தியா வந்தடைந்தனர்

    பிலிப்பைன்சில் இருந்து புறப்பட்டு மலேசியாவில் சிக்கித் தவித்த 150 தமிழக மானவர்கள் உள்ளிட்ட 185 இந்தியர்கள் இந்தியா வந்தடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    புதுடெல்லி :

    சீனாவில் தோன்றிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவி வருகிறது.இதைத்தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளன.
     
    இந்தியாவில் நேற்று மேலும் பலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 150-ஐ கடந்துள்ளது. இவர்களில் 26 பேர் வெளிநாட்டினர் ஆவர். மும்பையை சேர்ந்த ஒருவர் இறந்ததால் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்து விட்டது

    ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள், துருக்கி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து யாரும் இந்தியா வரக்கூடாது என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தடை விதித்துள்ளது. இந்த தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. மேற்கண்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகளை அவர்கள் விமானம் ஏறும் இடத்திலேயே தடுத்து விடுமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இதேபோல், ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகளை சேர்ந்த பயணிகள் இந்தியா வர மத்திய அரசு உடனடி தடை விதித்துள்ளது. இந்த தடை 31-ம் தேதிவரை அமலில் இருக்கும். அதன்பிறகு நீட்டிப்பது பற்றி ஆய்வுக்கு பின் முடிவு செய்யப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.

    மலேசியா, பிலிப்பைன்சில் இருந்து இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது அங்குள்ள மாணவர்களை பாதித்துள்ளது. பிலிப்பைன்சில் ஏராளமான இந்தியர்கள் மருத்துவம் படித்து வருகின்றனர். குறிப்பாக, தமிழர்கள் அதிக அளவில் அங்கு மருத்துவம் படித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே, பிலிப்பைன்ஸ் அரசு எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தொடர்ந்து கல்லூரிகள் மூடப்பட்டதால் அங்கிருந்து 185 இந்திய மாணவர்கள் திங்கட்கிழமை இரவு இந்தியாவுக்கு புறப்பட்டனர். இதில் 70 பேர் மாணவிகள் ஆவர்.

    இவர்கள் வந்த விமானம் கோலாலம்பூர் வந்து சேர்ந்தபோது இந்தியா விதித்துள்ள தடை தெரியவந்தது. இதனால் அவர்கள் 185 பேரும் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர். இதனால் அங்கு தவித்து வரும் மாணவர்கள் தாங்கள் நாடு திரும்ப இந்திய அரசு ஏற்பாடு செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
     
    தகவலறிந்த வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், மலேசியாவில் சிக்கித்தவிக்கும் மாணவர்களை விமானம் மூலம் மீட்கப்படுவர் என தெரிவித்தார்.

    இந்நிலையில், பிலிப்பைன்சில் இருந்து புறப்பட்டு மலேசியாவில் சிக்கித் தவித்த 150 தமிழக மானவர்கள் உள்ளிட்ட 185 இந்தியர்கள் ஏர் ஏசியா விமானம் மூலம் விசாகப்பட்டினம் வந்தடைந்தனர். அவர்கள் 28 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர். 
    Next Story
    ×