search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய மந்திரி வி.முரளிதரன்
    X
    மத்திய மந்திரி வி.முரளிதரன்

    கொரோனா தாக்கம்: டெல்லி வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட மத்திய மந்திரி

    கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட டாக்டர் இருந்த மருத்துவமனைக்கு சென்றுவந்த வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.முரளிதரன் டெல்லி வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
    புதுடெல்லி:

    கேரளா மாநிலத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான வி.முரளிதரன் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் வெளியுறவுத்துறை இணை மந்திரியாக பொறுப்பு வகித்து வருகிறார்.

    கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்க தொடங்கிய பின்னர் கடந்த 14-ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு முரளிதரன் சென்றிருந்தார்.

    அவர் அங்கு சென்று நிலவரங்களை பார்வையிட்டு வந்த பின்னர் அதே மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஒரு டாக்டர் சமீபத்தில் ஸ்பெயின் நாட்டுக்கு சென்று வந்ததாகவும் அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.

    ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவ கல்லூரி மருத்துவமனை

    பாதிப்புக்குள்ளான டாக்டரை முரளிதரன் நேரடியாக சந்திக்காவிட்டாலும் முன்எச்சரிக்கை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக இன்று மாலை தெரிவித்துள்ளார்.

    தனக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையில், ஸ்பெயின் நாட்டில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றுடன் கேரளாவுக்கு வந்த அந்த டாக்டர் தற்போது திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதற்கு முன்னர் அவரை சந்தித்த ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவ கல்லூரி மருத்துவமனை பணியாளர்கள் சுமார் 75 பேரும் 20-க்கும் மேற்பட்ட டாக்டர்களும் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவ கல்லூரி மருத்துவமனை இயக்குனர் ஆஷா கிஷோர் இன்று தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×