search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2 ஆயிரம் ரூபாய் நோட்டு
    X
    2 ஆயிரம் ரூபாய் நோட்டு

    2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிப்பது நிறுத்தமா? - பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி பதில்

    2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிப்பதை நிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று நிதித்துறை இணை மந்திரி அனுராக்சிங் தாகூர் கூறினார்.
    புதுடெல்லி:

    மக்களவையில், அரசு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிப்பதை நிறுத்திவிட்டதா? 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஏ.டி.எம்.கள் மூலம் வினியோகிக்கக் கூடாது என்று பொதுத்துறை வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு மத்திய நிதித்துறை இணை மந்திரி அனுராக்சிங் தாகூர் எழுத்து மூலம் பதில் அளித்து கூறியதாவது:-

    மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், விரும்பும் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் அதிகமாக விடவேண்டும் என்ற அடிப்படையிலும் குறிப்பிட்ட மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது குறித்து ரிசர்வ் வங்கியின் ஆலோசனையை பெற்று மத்திய அரசு முடிவு செய்கிறது.





    இதுவரை ரூ.7.40 லட்சம் கோடி மதிப்புக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு, வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.5.49 லட்சம் கோடி மதிப்புள்ள நோட்டுகள் புழக்கத்திலும், ரூ.93 ஆயிரம் கோடி மதிப்புள்ள நோட்டுகள் ரிசர்வ் வங்கி இருப்பாகவும் உள்ளது.

    மார்ச் 5-ந் தேதி நிலவரப்படி ரூ.1.96 லட்சம் கோடி மதிப்புக்கு 100 ரூபாய் நோட்டுகளும், ரூ.42,784.20 கோடி மதிப்புக்கு 50 ரூபாய் நோட்டுகளும், ரூ.16,619.60 கோடி மதிப்புக்கு 20 ரூபாய் நோட்டுகளும், ரூ.30,510.79 கோடி மதிப்புக்கு 10 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் உள்ளன.

    பணவீக்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) வளர்ச்சி, கிழிந்த நோட்டுகளை மாற்றுவது, இருப்பு தேவை ஆகியவைகளுக்கு ஏற்ப ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுகிறது.

    2019-20-ம் நிதி ஆண்டில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது தொடர்பாக அச்சகங்களுக்கு எந்த விண்ணப்பமும் முன்வைக்கப்படவில்லை. ஆனாலும், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

    மக்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் சிரமங்களை சந்திப்பதால் 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் அதிகமாக புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்தியன் வங்கி ஆகிய 2 வங்கிகளுக்கு மட்டும் 500, 200 ரூபாய் நோட்டுகள் வைப்பதற்கு ஏற்றவாறு ஏ.டி.எம். எந்திரங்களை மறுகட்டமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×