search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட ஷா ஆலம்
    X
    கைது செய்யப்பட்ட ஷா ஆலம்

    டெல்லி வன்முறை: ஆம் ஆத்மி கவுன்சிலரின் சகோதரரும் கைது

    டெல்லி வன்முறையில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி முன்னாள் கவுன்சிலர் தாகீர் உசேனை தொடர்ந்து அவரது சகோதரையும் போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.
    புதுடெல்லி:

    சிஏஏ-க்கு ஆதரவாகவும், எதிராகவும் கடந்த மாதம் தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட போராட்டங்களின் போது வன்முறை வெடித்தது. 

    இந்த வன்முறை சம்பவத்தில் தலைமை காவலர், உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா உள்பட 53 பேர் உயிரிழந்தனர். மேலும், 200-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

    இதில், சந்த் பாக் பகுதியில் உளவுத்துறையின் ரகசிய அதிகாரி அங்கித் சர்மா கொலையில் அப்பகுதியைச் சேர்ந்த ஆம் ஆத்மி கவுன்சிலர் தாகீர் உசேன் மீது குற்றம்சாட்டப்பட்டது. 

    இந்த குற்றச்சாட்டுகளையடுத்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது கட்சியில் இருந்து தாகீர் உசேனை உடனடியாக நீக்கினார்.

    இதையடுத்து, தலைமறைவாக இருந்த தாகீர் உசேன் கடந்த 5-ம் தேதி டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் சரணடைந்தார். ஆனால், இந்த வழக்கு தங்கள் நீதிமன்ற எல்லைக்கு உள்பட்டவில்லை என தெரிவித்த நீதிமன்றம் தாகீர் உசேன் சரணடைவதை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

    இதற்கிடையில், டெல்லி வன்முறையில் தாகீர் உசேனின் சகோதரர் ஷா ஆலமுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை டெல்லி போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். 

    இந்நிலையில், ஷா ஆலமை டெல்லி போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், அவருக்கு அடைக்கலம் கொடுத்த மேலும் மூன்று பேரையும் கைது செய்தனர்.
     
    Next Story
    ×