search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி
    X
    நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி

    நாளுக்கு நாள் நம்பிக்கை இழந்துவருகிறேன் - நிர்பயாவின் தாயார்

    குற்றவாளிகளை தூக்க்கிலிடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் நாளுக்கு நாள் தான் நம்பிக்கையை இழந்துவருவதாக நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளையும் மார்ச் 3-ம் தேதி (நாளை) தூக்கிலிடும்படி டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

    இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா, தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் பவன் குமார் குப்தாவின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
     
    சிறார் சட்டப்பிரிவுகளின் கீழ் தனக்கு தண்டனை வழங்க வேண்டும் என கூறிவரும் குற்றவாளி பவன் குமார் குப்தாவின் மனுக்களை டெல்லி உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்துவிட்ட நிலையில் தற்போது கடைசி சட்ட வாய்ப்பான மறு சீராய்வு மனுவும் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதனையடுத்து, பவன் குமார் குப்தா சார்பில் ஜனாதிபதியிடம் இன்று கருணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் ஏ.பி.சிங் இன்று பிற்பகல் தெரிவித்தார்.

    இந்நிலையில், தன்னை தூக்கிலிடக்கூடாது என பவன் குமார் குப்தா சார்பில் டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று பிற்பகல் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மாலை தீர்ப்பு வழங்கிய டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தர்மேந்தர் ராணா உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். 

    ஜனாதிபதியிடம் பவன் குமார் குப்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுவின் மீது ஜனாதிபதி மாளிகை இன்னும் எந்த முடிவும் எடுக்காததால் நிர்பயா வழக்கின் குற்றவாளிகளை தூக்கிலிடும் நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடுவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
     
    இந்நிலையில், டெல்லியில் கூடுதல் அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி கூறுகையில்,

    ''குற்றவாளிகளை தூக்கிலிடவேண்டும் என தான் பிறப்பித்த உத்தரவையே செயல்படுத்த நீதிமன்றம் இவ்வளவு காலம் எடுப்பது ஏன்? தூக்கிலிடும் நடவடிக்கை தொடர்ச்சியாக தள்ளிப்போடப்படுவது நமது ஒட்டுமொத்த அமைப்பும் தோல்வியடைந்துள்ளது என்பதை காட்டுகிறது. 

    இந்தியாவில் நீதி கிடைப்பது தாமதமாகுகிறது என்பதை ஒட்டுமொத்த உலகமும் பார்த்துக்கொண்டுதான் உள்ளது.  ஒட்டுமொத்த அமைப்பும் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவே உள்ளது.

    நான் ஒவ்வொரு நாளும் நம்பிக்கையை இழந்து வருகிறேன். ஆனாலும் அதிலிருந்து மீண்டு உயரந்து நிற்கிறேன். குற்றவாளிகள்  தூக்கிலிடப்படவேண்டும். 

    நிர்பயா வழக்கை விட மோசமான வழக்கு என்று எதுவும் இருக்க முடியாது. ஆனாலும் நீதி கிடைக்க இன்னும் போராடிக்கொண்டிருக்கிறேன். இந்த நாடகத்தை நீதிமன்றங்கள் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது’’ என்றார்.     
    Next Story
    ×