search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ப.சிதம்பரம் மற்றும் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம்
    X
    ப.சிதம்பரம் மற்றும் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம்

    ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு - ப.சிதம்பரம் மீதான விசாரணையை மே 4-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும்

    ப.சிதம்பரம் மற்றும் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீதான முழு விசாரணையையும் வருகிற மே மாதம் 4-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று சி.பி.ஐ.க்கும், அமலாக்கப்பிரிவுக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.
    புதுடெல்லி:

    கடந்த 2006-ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்தில் மலேசிய நிறுவனமான மேக்சிஸ் நிறுவனம் ரூ.3,500 கோடி முதலீடு செய்ய அன்னிய முதலீட்டு அபிவிருத்தி வாரியம் அனுமதி வழங்கியது. இந்த அனுமதி, விதிமுறைகளுக்கு புறம்பாக வழங்கப்பட்டதாகவும், இதில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் ஆதாயம் அடைந்ததாகவும் புகார் எழுந்தது.

    இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு ஆகியவை தனித்தனியாக வழக்கு பதிவு செய்தன. இந்த வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கில் பின்தங்கிய நிலை ஏற்பட்டதால் கடந்த ஆண்டு திடீரென வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    பின்னர், கடந்த ஜனவரி மாதம் மீண்டும் வழக்கு விசாரணை தீவிரம் அடைந்தது. இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை தொடர்பான நிலவர அறிக்கைகளை சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் கோர்ட்டில் தாக்கல் செய்தன.

    இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு தனிக்கோர்ட்டில் நீதிபதி அஜய்குமார் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது அமலாக்கப்பிரிவு தரப்பில் ஆஜரான வக்கீல், வழக்கு தொடர்பான கூடுதல் தகவல்களை பெறுவதற்காக 4 நாடுகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருப்பதாகவும், அந்த நாடுகளின் பதில்களுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அதற்கான கால அவகாசமும் கேட்டார்.

    இதைத்தொடர்ந்து நீதிபதி, இந்த வழக்கில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீதான முழு விசாரணையையும் வருகிற மே மாதம் 4-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று சி.பி.ஐ.க்கும், அமலாக்கப்பிரிவுக்கும் உத்தரவிட்டார்.
    Next Story
    ×