search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சரண்யா-குழந்தை வியான்
    X
    சரண்யா-குழந்தை வியான்

    பேஸ்புக் பழக்கத்தால் விபரீதம்- கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக குழந்தையை கொன்ற பெண்

    பேஸ்புக் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக தனது 2வயது குழந்தையை கடலில் வீசி கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள கொடுவல்லி பகுதியை சேர்ந்தவர் பிரனவ். இவரது மனைவி சரண்யா (வயது 22).

    இவர்கள் இருவரும் கடந்த 3 வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இந்த தம்பதியின் 2 வயது குழந்தை வியான். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த பிரனவ்-சரண்யா மண வாழ்க்கையில் புயல் வீசியது.

    கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சரண்யா கணவரிடம் கோபித்துக்கொண்டு குழந்தை வியானுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சரண்யா தனது கணவர் பிரனவுக்கு போன் செய்து சமாதானமாக பேசினார். மீண்டும் அவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், தாய் வீட்டிற்கு வந்து தன்னை அழைத்துச் செல்லும்படியும் கேட்டுக்கொண்டார்.

    இதனால் மனைவியை அழைப்பதற்காக பிரனவ் மாமியார் வீட்டிற்கு சென்றார். இரவு என்பதால் அங்கு தங்கிவிட்டு மறுநாள் காலையில் நமது வீட்டிற்கு செல்லலாம் என்று சரண்யா கூறியதால் பிரனவும் அங்கு தங்கினார்.

    மறுநாள் காலை எழுந்து பார்த்த போது வீட்டில் இருந்த குழந்தை வியான் மாயமாகி இருந்தது. குழந்தையை காணவில்லை என்றதும் சரண்யா கண்ணீர் விட்டு கதறி அழுதார். தன் மீது உள்ள கோபத்தில் குழந்தையை கணவர்தான் ஆள்வைத்து கடத்தி சென்று விட்டதாக குற்றம் சுமத்தினார்.

    அவரை கணவர் சமாதானம் செய்தபோது அதை ஏற்காத சரண்யா குழந்தையை கணவர் கடத்திச் சென்றுவிட்டதாக போலீசிலும் புகார் செய்தார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து பிரனவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது தான் குழந்தையை கடத்தவில்லை என்று போலீசாரிடம் பிரனவ் தெரிவித்தார்.

    இதனால் போலீசாரின் சந்தேகப்பார்வை சரண்யா மீது விழுந்தது. அவரை தனியாக அழைத்து விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.

    அவரிடம் போலீசார் தங்கள் பாணியில் விசாரணையை தொடர்ந்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    சரண்யாவுக்கும், அந்த பகுதியை சேர்ந்த திருமணம் ஆகாத வாலிபர் ஒருவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அதன் பிறகு அவர்கள் 2 பேரும் போனில் பேசி தங்கள் நட்பை வளர்த்துக்கொண்டனர். நாளடைவில் அவர்களது பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.

    கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ குழந்தை வியான் இடையூறாக இருக்கும் என்பதால் குழந்தையை தீர்த்துகட்ட சரண்யா திட்டமிட்டார். அதேசமயம் கொலை பழியை கணவர் மீது போடவும் முடிவு செய்தார். அதன்படி போன் செய்து கணவரை வீட்டிற்கு வரவழைத்தார்.

    சம்பவத்தன்று அதிகாலையில் அனைவரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது குழந்தையை தூக்கிக் கொண்டு அந்த பகுதியில் உள்ள கடலுக்கு சென்ற சரண்யா குழந்தையை கடலில் வீசி கொன்றுவிட்டு ஒன்றும் தெரியாதவர் போல வீட்டிற்கு வந்து நாடகமாடி உள்ளார். இதைத் தொடர்ந்து சரண்யாவை போலீசார் கைது செய்தனர். அவர் குழந்தையை வீசிய கடல் பகுதிக்கு சென்று போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு குழந்தையின் பிணம் கடற்கரையில் ஒதுங்கி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.
    Next Story
    ×