search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரியங்கா காந்தி திருமண நாளில்  ராபர்ட் வதேராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்
    X
    பிரியங்கா காந்தி திருமண நாளில் ராபர்ட் வதேராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்

    திருமண நாளில் மலரும் நினைவுகளை பகிர்ந்த பிரியங்கா - டுவிட்டரில் படங்களையும் வெளியிட்டார்

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தனது கணவர் ராபர்ட் வதேராவை திருமணம் செய்து கொண்ட மலரும் நினைவுகளை டுவிட்டரில் பகிர்ந்து கொண்டார்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழில் அதிபர் ராபர்ட் வதேராவை 6 ஆண்டு காலம் காதலித்து, பின்னர் மணந்தார்.

    இவர்களது திருமணம், குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் எண்.10, ஜன்பத் இல்லத்தில் 1997-ம் ஆண்டு, பிப்ரவரி 18-ந் தேதி நடந்தது. பிரியங்கா, ராபர்ட் வதேரா தம்பதியர் நேற்று தங்களது 23-வது திருமண நாளை கொண்டாடினர்.

    பிரியங்கா காந்தியின் மலரும் நினைவுகள் அடங்கிய  புகைப்படம்

    இதையொட்டி மலரும் நினைவுகளை பிரியங்கா காந்தி டுவிட்டரில் பகிர்ந்து கொண்டார்.

    அதில் அவர், “ ஒரு மில்லியன் அழகான தருணங்கள்... காதல், கண்ணீர், சிரிப்பு, செல்ல கோபம், நட்பு, குடும்பம், இறைவனின் 2 அன்புப்பரிசுகள் .. ஒப்பிட முடியாத நாய்குட்டிகள்... இருவரும் இணைந்த வாழ்நாளில் ஈடுசெய்ய முடியாத உறுதியான ஞானம்... 6 பிளஸ் 23 ஆண்டுகள்.. 29 ஆண்டுகள் இன்று.... என்றென்றும்...” என நெகிழ்ந்துள்ளார்.

    திருமண காட்சி, தாயார் சோனியா, சகோதரர் ராகுல் காந்தி, கணவர் ராபர்ட் வதேரா, குழந்தைகள் ரைஹான், மிராயா மற்றும் நாய்குட்டிகளுடன் எடுத்துக்கொண்ட படங்களையும் பிரியங்கா வெளியிட்டு இருக்கிறார்.

    திருமண நாளையொட்டி காதல் மனைவி பிரியங்காவுக்கு கணவர் ராபர்ட் வதேரா வாழ்த்து தெரிவித்தார்.

    இதையொட்டி அவர் வெளியிட்ட செய்தியில், “ இனிய திருமண நாள் பிரியங்கா... பல ஆண்டுகளாக ஒன்றிணைந்து இருப்பது நம்மை ஒன்றாக வளரச்செய்திருக்கிறது. நல்ல தருணங்கள்... கடினமான தருணங்கள்... நம் வாழ்க்கையை சுவாரசியமாக்கி இருக்கின்றன. நீ மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கவும், அன்பு நிறைந்த ஆண்டுகள் தொடரவும் வாழ்த்துகள்... உனது பக்கத்தில் இன்னும் பல்லாண்டுகள் இருக்க ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். என்ன வந்தாலும் பரவாய் இல்லை” என கூறி உள்ளார்.
    Next Story
    ×