search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வோடபோன் ஐடியா
    X
    வோடபோன் ஐடியா

    நிலுவை தொகையில் ரூ.2,500 கோடி வழங்க வோடபோன் ஐடியா நிறுவனம் ஒப்புதல்

    அரசுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையில் ரூ.2,500 கோடி வழங்க வோடபோன் ஐடியா நிறுவன வாரிய இயக்குனர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனர்.
    புதுடெல்லி:

    வோடபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட 15 தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் உரிம கட்டணம், அலைக்கற்றை கட்டணம் உள்ளிட்ட வகையில் ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் கோடி பாக்கியை நள்ளிரவுக்குள் செலுத்துமாறு கடந்த 14ந்தேதி மத்திய அரசின் தொலை தொடர்பு துறை அதிரடியாக உத்தரவிட்டது.

    இந்த உத்தரவு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24ந்தேதி சுப்ரீம் கோர்ட்டால் பிறப்பிக்கப்பட்டது ஆகும்.

    இந்த உத்தரவை வோடபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட 15 தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் கடந்த ஜனவரி மாதம் 24ந்தேதிக்குள் ஏற்று செயல்படுத்தி இருக்க வேண்டும்.  ஆனால் அவை செயல்படுத்தவில்லை.

    பார்தி ஏர்டெல்

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு மாறாக, இந்த தொலை தொடர்பு நிறுவனங்கள் அந்த தொகையை செலுத்துமாறு வலியுறுத்த வேண்டாம், செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டாம் என தொலை தொடர்பு துறை டெஸ்க் அதிகாரி ஜனவரி 23ந்தேதி ஒரு உத்தரவை (சுற்றறிக்கை) அனுப்பி உள்ளார்.

    இதுபற்றி அறிந்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அருண் மிஷ்ரா கடந்த 14ந்தேதி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.  இதனை தொடர்ந்தே தொலைதொடர்பு துறை இந்த உத்தரவை பிறப்பித்தது.

    இதன்படி, சுனில் மிட்டல் தலைமையிலான ஏர்டெல் நிறுவனமானது, உரிம கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டு கட்டணம் ஆகியவை உள்பட ரூ.35 ஆயிரத்து 586 கோடி தொகையை செலுத்த வேண்டும் என்று அரசு தெரிவித்து உள்ளது.  அந்த வகையில், ஏர்டெல் நிறுவனம் ரூ.10 ஆயிரம் கோடியை அரசிடம் இன்று செலுத்தி உள்ளது.  இதுதவிர்த்து மீதமுள்ள தொகையை தன்மதிப்பீட்டுக்கு பின் வழங்குவோம் என அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    இதேபோன்று வோடபோன் ஐடியா நிறுவனத்தின் வாரிய இயக்குனர்கள் இணைந்து நடத்திய ஆலோசனையின் முடிவில், மத்திய அரசின் தொலை தொடர்பு துறைக்கு இன்று ரூ.2,500 கோடி வழங்க வோடபோன் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.  இந்த வார இறுதியில் ரூ.1,000 கோடி வழங்கவும் ஒப்புதலளித்து உள்ளது.
    Next Story
    ×