search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஷா பைசல்
    X
    முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஷா பைசல்

    காஷ்மீர்: குடிமையியல் தேர்வில் முதலிடம் பிடித்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மீது பாய்ந்தது பொது பாதுகாப்புச்சட்டம்

    குடிமையியல் தேர்வில் நாட்டிலேயே முதலிடம் பிடித்த காஷ்மீர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஷா பைசல் பொது பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
    காஷ்மீர்:

    2010-ம் ஆண்டு நடைபெற்ற குடிமையியல் பணிக்கான ஐஏஎஸ் தேர்வில் நாட்டிலேயே முதலிடம் பிடித்தவர் ஷா பைசல். இவர் காஷ்மீரில் ஐஏஎஸ் அதிகாரியாக செயல்பட்டுவந்தார். 

    காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி தனது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்தார். இதைதொடர்ந்து 2019 மார்ச் 16-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கம் என்ற கட்சியை தொடங்கினார்.

    இதற்கிடையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அப்பகுதியை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்த நடவடிக்கையின் போது பல அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். 

    ஆனால், ஆகஸ்ட் 13-ம் தேதி வெளிநாடு செல்ல முயன்ற ஷா பைசலை டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்திய  போலிசார் அவரை ஸ்ரீநகருக்கு அழைத்து செய்தனர். பின்னர் அங்கு அவர் 170 என்ற சட்டப்பிரிவின் கீழ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். 

    இந்த சட்டத்தின் படி ஒரு நபரை 6 மாதங்கள் மட்டுமே விசாரணையின்றி காவலில் வைக்கலாம். அந்த சட்டத்தின் அடிப்படையில் ஷா பைசலின் வீட்டுக்காவல் நேற்று முன்தினத்துடன் முடிவுக்கு வந்தது.
     
    இந்நிலையில், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஷா பைசல் மீது பொது பாதுகாப்புச்சட்டம் பாய்ந்துள்ளது. இந்த சட்டத்தின் மூலம் வீட்டுக்காவலிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

    பொது பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் எந்த வித விசாரணையும் இன்றி ஒரு நபரை இரண்டு ஆண்டுகள் வரை சிறையில் வைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

    காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரிகள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்பட மேலும் சில அரசியல் தலைவர்கள் ஏற்கனவே பொதுபாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் தற்போது 2010-ம் ஆண்டு குடிமையியல் தேர்வில் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்த ஐஏஎஸ் அதிகாரி ஷா பைசலும் இச்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×