search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்
    X
    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

    டிரம்ப் 24-ந்தேதி இந்தியா வருகிறார்: வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2 நாள் பயணமாக வருகிற 24-ந்தேதி இந்தியா வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறுகிறது. டொனால்டு டிரம்ப் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

    அமெரிக்க தேர்தலுக்கு முன்பு டிரம்ப் இந்தியா வர திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. பிப்ரவரி கடைசியில் அவர் வரலாம் என்றும் கூறப்பட்டது.



    டிரம்ப் வருகை தொடர்பாக இந்தியா- அமெரிக்க தூதரகம் மூலம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடந்த மாதம் 16-ந்தேதி தெரிவித்தது.

    அதோடு மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோர் அமெரிக்க மந்திரிகளான மார்க் எஸ்பர், மைக் பாப்மேயை சந்தித்து டிரம்ப் இந்தியா வருகை தொடர்பாக அழைப்பு விடுத்து இருந்தனர்.

    இந்தநிலையில் 2 நாள் பயணமாக டிரம்ப் வருகிற 24-ந்தேதி இந்தியா வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவி மெலோனியாவுடன் வருகிற 24 மற்றும் 25-ந்தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது அவர் டெல்லி மற்றும் அகமதாபாத் செல்வார். அகமதாபாத்தில் உள்ள காந்தி ஆசிரமம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிடுவார். பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோரை டிரம்ப் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.

    பிரதமர் மோடி- டிரம்ப்

    டிரம்பின் இந்த பயணம் மூலம் இந்தியா- அமெரிக்கா இடையிலான உறவு மேலும் வலுப்பெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    அமெரிக்கா அதிபராக பதவி வகிக்கும்டிரம்ப் இந்தியா வருவது இதுவே முதல் முறை ஆகும். இதற்கு முன்பு அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா 2 முறை அதாவது 2010 மற்றும் 2015-ல் இந்தியா வந்தார்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் அங்குள்ள பெரும்பாலான இந்தியர்களின் வாக்குகளை கவருவதற்காகவே டிரம்ப் இந்தியா வருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அவர் மோடியுடன் இணைந்து அகமதாபாத்தில் பிரமாண்ட நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
    Next Story
    ×