search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோலே மார்க்கெட் மையத்தில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை
    X
    கோலே மார்க்கெட் மையத்தில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை

    டெல்லி தேர்தல் முடிவுகள்... மேஜிக் நம்பரை தாண்டி அதிக இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை

    டெல்லியில் ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றிருப்பதால் அக்கட்சியினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
    புதுடெல்லி:

    டெல்லி மாநிலத்தில் 70 உறுப்பினர் கொண்ட சட்டசபைக்கு கடந்த 8-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் இன்று காலை தொடங்கியது. 21 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. முதல் கட்டமாக  தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பின்னர் மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. 

    வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் இருந்தே ஆம் ஆத்மி கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. ஆட்சியமைக்க  36 இடங்கள் தேவை என்ற நிலையில், ஆம் ஆத்மி கட்சி 56 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. பாஜக 14 இடங்களிலும் முன்னிலை பெற்றிருந்தது.

    ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் திரண்டுள்ள தொண்டர்கள்

    இந்த தேர்தலில் 79 பெண்கள் உள்பட 672 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறியிருக்கின்றன. 

    இதனை நிரூபிக்கும் வகையில் அந்த கட்சி, மேஜிக் நம்பரைத் தாண்டி அதிக தொகுதிகளை கைப்பற்றும் சூழல் உள்ளது. மூன்றாவது முறையாக தலைநகரில் ஆட்சியை பிடிக்க உள்ளதால் ஆம் ஆத்மி கட்சியினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

    வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பாகவே ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தை பலூன்களாலும், கட்அவுட்டுகளாலும் அலங்கரித்து வைத்து வெற்றி கொண்டாட்டத்திற்கு தயாராகிவிட்டனர். 
    Next Story
    ×