search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய மந்திரிகளுடன் ஆளுநர் வஜுபாய் வாலா மற்றும் முதல்வர் எடியூரப்பா
    X
    புதிய மந்திரிகளுடன் ஆளுநர் வஜுபாய் வாலா மற்றும் முதல்வர் எடியூரப்பா

    10 புதிய மந்திரிகளுடன் மந்திரி சபையை விரிவாக்கம் செய்த எடியூரப்பா

    கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா தலைமையிலான மந்திரிசபை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டு, 10 புதிய மந்திரிகள் பதவியேற்றனர்.
    பெங்களூரு:

    கர்நாடகாவில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. அப்போது காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் கொறடா உத்தரவை மீறியதாக தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி அமைந்தது.

    அதன் பிறகு காலியாக இருந்த 15 இடங்களுக்கு நடந்த இடைத்தேர்தலில் 12 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றது. இதில் ஒருவரை தவிர மற்ற 11 பேரும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து பா.ஜனதாவுக்கு வந்தவர்கள். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் அவர்களுக்கு மந்திரி பதவி வழங்கப்படும் என்று எடியூரப்பா பிரசாரத்தின் போது உறுதி அளித்திருந்தார்.

    சோமசேகர் பதவியேற்பு

    அதன்படி இன்று எடியூரப்பா தனது மந்திரி சபையை விரிவாக்கம் செய்தார். எஸ்.டி. சோமசேகர், ரமேஷ் ஜர்கிகோலி, ஆனந்த் சிங், சுதாகர், பிராத்தி பசவராஜ், சிவராம் ஹெப்பர், பி.சி.பாட்டீல், கே.கோபாலய்யா, கே.சி.நாராயண கவுடா, ஸ்ரீமந்த் பாலாசாகேப் பாட்டீல் ஆகிய 10 பேர் மந்திரி சபையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

    ஆளுநர் மாளிகையில் நடந்த எளிய விழாவில், புதிய மந்திரிகளுக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    இதன்மூலம் 34 பேர் கொண்ட மந்திரிசபையின் பலம், முதல்வர் எடியூரப்பாவுடன் சேர்த்து 28 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 6 இடங்கள் காலியாக உள்ளது.
    Next Story
    ×