search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹர்திக் படேல்
    X
    ஹர்திக் படேல்

    காங்கிரஸ் தலைவர் ஹர்திக் படேல் மீண்டும் கைது

    2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை முன்னிட்டு அனுமதியின்றி பொதுக்கூட்டம் நடத்தியது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ஹர்திக் படேலை போலீசார் மீண்டும் கைது செய்தனர்.
    ஆமதாபாத்:

    குஜராத்தில் படேல் இனத்தவருக்கு இட ஒதுக்கீடு கேட்டு போராடி வந்த ஹர்திக் படேல், கடந்த நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரசில் இணைந்தார். படேல் இனத்தவருக்கான போராட்டம் தொடர்பாக இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    இதில் கடந்த 2015-ம் ஆண்டு போடப்பட்டு இருந்த தேசத்துரோக வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாததால் கடந்த 18-ந்தேதி ஆமதாபாத் போலீசாரால் ஹர்திக் படேல் கைது செய்யப்பட்டார். அங்குள்ள சமர்பதி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவருக்கு ஆமதாபாத் கோர்ட்டு நேற்று முன்தினம் ஜாமீன் வழங்கியது. இதனால் நேற்று பிற்பகலில் அவர் சிறையில் இருந்து விடுதலையானார்.

    சிறையில் இருந்து வெளியே வந்ததும் காந்திநகர் போலீசார் உடனடியாக அவரை கைது செய்தனர். 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை முன்னிட்டு அனுமதியின்றி பொதுக்கூட்டம் நடத்தியதாக படேல் மீது தொடரப்பட்டிருந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    தேசத்துரோக வழக்கில் ஜாமீன் பெற்று வெளியே வந்த ஹர்திக் படேல் மீண்டும் கைது செய்யப்பட்ட சம்பவம் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×