search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார்
    X
    வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார்

    காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபர் தலையீடு என்ற பேச்சுக்கே இடமில்லை - வெளியுறவுத்துறை

    காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபர் தலையீடு என்ற பேச்சுக்கே இடமில்லை என இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியா, பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் பிரச்சினையில் உதவ தயார் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பல தருணங்களில் அறிவித்துள்ளார். ஆனால் ஒவ்வொரு முறையும் இந்தியா இதை நிராகரித்து உள்ளது.

    இந்தியா, பாகிஸ்தான் இடையேயான பிரச்சினையை நாங்கள் இரு நாடுகளும் பேசி தீர்த்துக்கொள்வோம், அதில் மூன்றாவது நாட்டின் தலையீட்டுக்கு இடம் இல்லை என்று திட்டவட்டமாக கூறி வந்துள்ளது.

    இதற்கிடையே, சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய டிரம்ப், இந்தியா, பாகிஸ்தான் இடையே என்ன நடந்து கொண்டிருக்கிறது? நாங்கள் உதவ முடியும் என்றால் நிச்சயம் உதவ தயார். இதை நாங்கள் மிக உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசம் செய்ய தயார் என டிரம்ப் கூறியது பற்றி இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாட்டின் சமரசத்திற்கே இடமில்லை என ஏற்கனவே நாங்கள் கூறியுள்ளோம். தற்போது இந்த விஷயத்தில் மூன்றாம் நாட்டின் சமரசத்திற்கே எந்தப் பங்கும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாவது நாடு தலையீடுவது குறித்த எங்கள் நிலைப்பாட்டில்  மிகவும் தெளிவாகவும் நிலையானதாகவும் உள்ளோம். 

    உலக நாடுகள் பாகிஸ்தானின் இரட்டை வேடத்தைப் புரிந்து கொண்டுள்ளது என்பதை பாகிஸ்தான் உணரவேண்டும். பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள் மறுபுறம், குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 

    உண்மையில் பாகிஸ்தான், அவர்கள் கூறியது போல், ஒரு உறவைப் பெற விரும்பினால், அவர்கள் அதற்கான உகந்த நிலையை உருவாக்க வேண்டும்.

    இந்தியாவுடனான அமைதியான உறவை பாகிஸ்தான் விரும்பினால் அது அவர்களை மட்டுமே சார்ந்தது. பாகிஸ்தான் ஏன் பயங்கரவாதம் குறித்து உறுதியான நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை. அவர்கள் முதலில் தங்கள் தேசத்தின் பிரச்சினைகளை தீர்க்க முன் வர வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×