search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சஞ்சய் ராவத்
    X
    சஞ்சய் ராவத்

    சாவர்க்கரை எதிர்ப்பவர்களை 2 நாள் அந்தமான் சிறையில் அடைக்க வேண்டும் - சஞ்சய் ராவத்

    சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரை எதிர்ப்பவர்களை 2 நாள் அந்தமான் சிறையில் அவர் இருந்த அறையில் அடைக்க வேண்டும் என சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலின் போது பா.ஜ.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என மத்தியில் ஆட்சி செய்யும் தேசிய ஜனநாயக கூட்டணியிடம் கேட்போம் என தெரிவித்திருந்தது.

    ஆனால், எதிர்க்கட்சியான காங்கிரஸ் பாஜகவின் இந்த அறிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகியவை கூட்டணி வைத்து ஆட்சி செய்து வருகின்றன. சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே முதல் மந்திரியாக பதவியேற்றார். 

    இதற்கிடையே, சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல் மந்திரி பிருத்விராஜ் சவான் கூறுகையில், சாவர்க்கர் பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்புக் கோரினார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கினால் நாங்கள் (காங்கிரஸ்) அதை எதிர்ப்போம். சாவர்க்கரின் வாழ்க்கை சர்ச்சைக்குரியது என தெரிவித்தார்.

    இந்நிலையில், வீர சாவர்க்கரை எதிர்ப்பவர்களை 2 நாள் அந்தமான் சிறையில் அவர் இருந்த அறையில் அடைக்க வேண்டும் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக, சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது;

    நாங்கள் எப்போதுமே வீர சாவர்க்கருக்கான மரியாதையைக் கோருகிறோம். வீர சாவர்க்கரை எதிர்ப்பவர்கள் எந்த கொள்கை உடையவர்களாக இருந்தாலும் சரி, எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி. அவர்கள் அந்தமான் சிறையில் சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த அறையில் 2 நாள் அடைக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவருடைய தியாகம் மற்றும் நாட்டுக்கான அவரது பங்களிப்பு குறித்து அவர்களுக்குப் புரியும்.

    சாவர்க்கர் தனது வாழ்க்கையில் 14 ஆண்டுகளை அச்சம் தரக்கூடிய அந்தமான் சிறையில் கழித்தார். எனவே, இதற்காக அவர் கவுரவிக்கப்பட வேண்டும் என்பது எப்போதுமே சிவசேனாவின் நிலைப்பாடு என குறிப்பிட்டார்.
    Next Story
    ×