search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    மாணவர்களுடன் பிரதமர் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி 20-ந் தேதிக்கு மாற்றம்

    மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடனான பிரதமர் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி 20-ந் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
    புதுடெல்லி:

    பள்ளி மாணவர்கள் எந்தவித மன அழுத்தமும் இன்றி தேர்வுகளை எழுதும் வகையில் அவர்களை ஊக்கப்படுத்துவதற்காக பிரதமர் மோடி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடலை நடத்தி வருகிறார். அந்தவரிசையில் இந்த ஆண்டும் வருகிற 16-ந்தேதி கலந்துரையாடல் நடத்துவதற்கு அவர் திட்டமிட்டு இருந்தார்.

    இதில் கலந்து கொள்ளும் மாணவர்களை தேர்வு செய்வதற்காக 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சிறப்பு கட்டுரைப்போட்டி ஒன்றை நடத்தி இருந்தது. மேலும் இந்த கலந்துரையாடலுக்காக வருகிற 16-ந்தேதி மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    ஆனால் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் 16-ந் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், அன்றைய தினம் மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தன.

    மத்திய அரசு


    இதைப்போல மகர சங்கராந்தி, லோரி உள்ளிட்ட பண்டிகைகளால் வேறு பல மாநிலங்களிலும் 16-ந் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. எனவே அந்த மாநிலங்களை சேர்ந்த மாணவர்களை பங்கேற்க வைப்பதிலும் சிரமம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து பிரதமர் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி வருகிற 20-ந் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மாணவர்களுடனான பிரதமர் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சியை 16-ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்காக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் அதிக ஆர்வமும், உற்சாகமும் காணப்பட்டது. தனித்துவமான இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு மட்டுமின்றி, மன அழுத்தம் இன்றி தேர்வுகளை எழுதி வெற்றிகளை பெறுவதற்கு பிரதமர் வழங்கும் குறிப்புகளை பெறுவதற்கும் அவர்கள் ஆர்வமாக இருந்தனர்.

    ஆனால் பொங்கல், மகர சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகள் காரணமாக 16-ந் தேதி இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்த முடியாத நிலை உள்ளது. எனவே மாணவர்கள், ஆசிரியர்களுடனான பிரதமர் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி 20-ந் தேதி (திங்கட்கிழமை) நடத்தப்படும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×