search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொகாரோ பகுதியில் வாக்களிக்க காத்திருந்த வாக்காளர்கள்
    X
    பொகாரோ பகுதியில் வாக்களிக்க காத்திருந்த வாக்காளர்கள்

    ஜார்க்கண்டில் 3-வது கட்ட தேர்தல்: 17 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

    ஜார்க்கண்டில் 3-வது கட்ட தேர்தலாக 17 சட்டமன்ற தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதுவரை 2 கட்ட தேர்தல்கள் முடிந்து விட்டன. முதல்கட்டமாக 13 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக 20 தொகுதிகளுக்கும் ஒட்டுப்பதிவு முடிந்து விட்டது. 3-வது கட்டமாக 17 தொகுதிகளுக்கு  இன்று  வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7  மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு   மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

    17 தொகுதிகளிலும் 32 பெண்கள் உள்பட 309 பேர் போட்டியிடுகிறார்கள். 56.18 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு அளிக்கிறார்கள். இதற்காக 7016 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

    பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்கை பதிவு செய்தனர். முன்னாள் மத்திய மந்திரி பாஜக எம்பியுமான ஜெயந்த் சின்கா ஹசாரிபாக்கில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார்.

    ஓட்டு போடுவதற்காக வரிசையில் நின்ற பாஜக எம்பி ஜெயந்த் சின்கா

    3-வது கட்ட வாக்குப்பதிவுக்காக பா.ஜனதா சார்பில் பிரதமர் நரேந்திரமோடி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், ஸ்மிருதி இரானி, பா.ஜனதா செயல்தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி, சத்ருகன் சின்கா ஆகியோரும் பிரசாரம் செய்து தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்கள்.

    இன்று நடைபெற்று வரும் தேர்தல் ஜார்க்கண்ட் மாணவர் அமைப்புக்கு மிகவும் முக்கியமானதாகும். மொத்தமுள்ள 17 தொகுதிகளில் அந்த அமைப்பு 14 இடங்களில் போட்டியிடுகிறது. இந்த மாணவர் அமைப்பு 2014 தேர்தலில் 8 தொகுதிகளில் போட்டியிட்டு 5-ல் வெற்றி பெற்றது. தற்போது 52 தொகுதிகளில் களத்தில் குதித்துள்ளது. 

    ஜார்க்கண்டில் ஆட்சியை தக்க வைக்க பா.ஜனதாவும், ஆட்சியை கைப்பற்ற ஜார்க்கண்ட முக்தி மோர்ச்சா தலைமையிலான காங்கிரஸ் கூட்டணியும் கடுமையாக போராடி வருகின்றன. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 23 ஆம் தேதி நடைபெறுகிறது.
    Next Story
    ×