search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவேந்திர பட்னாவிஸ்
    X
    தேவேந்திர பட்னாவிஸ்

    சரத்பவார் என்னை அடிக்கடி சாதி ரீதியாக விமர்சிக்கிறார்: தேவேந்திர பட்னாவிஸ்

    சரத்பவார் தன்னை அடிக்கடி சாதி ரீதியாக விமர்சிக்கிறார் என்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
    மும்பை

    சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான தேவேந்திர பட்னாவிஸ் மராத்தி பத்திரிகை ஒன்றுக்கு அளித்து உள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    சட்டசபை தேர்தல் முடிவு வெளியான பிறகு சிவசேனா நடந்து கொண்ட விதத்தை பார்க்கும் போது, அவர்கள் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முன் கூட்டியே திட்டமிட்டு இருந்ததாக உணர்கிறேன். கடந்த 5 ஆண்டு பா.ஜனதா, சிவசேனா கூட்டணி ஆட்சியில் நான் எந்த பிரச்சினையிலும் உத்தவ் தாக்கரேயை கைவிடவில்லை. ஆனால் தேர்தல் முடிவு வந்த பிறகு உத்தவ் தாக்கரே எனது போன் அழைப்பை கூட எடுத்து பேசவில்லை.

    மராட்டியத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பல விஷயங்கள் திரை மறைவில் நடந்தன. அந்த நேரத்தில் பா.ஜனதா, தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்தது. ஆட்சி அமைக்க பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கும் முடிவில் இருந்து அஜித்பவார் பின்வாங்கியதற்கான காரணம் அவருக்கு நன்றாக தெரியும். அவர் தான் அதை வெளியில் கூறவேண்டும்.

    மரங்கள் வெட்டப்படாமல் இதுவரை ஒரு உள்கட்டமைப்பு திட்டங்கள் கூட நிறைவேற்றப்பட்டதில்லை. ஆரேகாலனியில் 2 ஆயிரம் மரங்களை வெட்டினோம். ஆனால் அதற்காக 4 ஆண்டுகளுக்கு முன்பே 23 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டோம். தற்போதும் அவை உயிருடன் உள்ளன. மேலும் 25 ஆயிரம் மரக்கன்றுகளை நட இருந்தோம்.

    ஆரேகாலனியில் மெட்ரோ ரெயில் திட்டம், புல்லட் ரெயில் போன்ற திட்டங்களுக்கு தடை விதித்து இருப்பது முதலீட்டாளர்களை மராட்டியத்தில் முதலீடு செய்ய யோசிக்க வைக்கும். முதலீட்டாளர்கள் மராட்டியம் முதலீடு செய்ய சரியான மாநிலமா என தீவிரமாக யோசிப்பார்கள்.

    சரத்பவார்

    நான், எனது சாதனைகளை நினைவில் வைத்து கொள்ளும் நபரோ, அல்லது எத்தனை பேர் என்னை ஏற்றுக்கொள்கிறார்கள் என்று எல்லாம் பார்த்து கொண்டு இருக்கும் நபர் கிடையாது. ஆனால் எனது தனித்துவமான வெற்றி எதுவென்றால் சரத்பவார் போன்ற பெரிய தலைவர் என்னை அடிக்கடி மறைமுகமாக சாதி ரீதியாக விமர்சிப்பது தான்.

    நான் ஒரு பிராமணன் என்பது உலகிற்கே தெரியும். என்னை மக்கள் ஏற்றுக்கொண்டு உள்ளனர். நான் மாநில அரசியலில் சிலவற்றை சாதித்து இருப்பதாக உணர்கிறேன், அல்லது சரத்பவார் போன்ற தலைவர்கள் என்னை சாதி ரீதியாக விமர்சித்து இருக்க மாட்டார்கள். என்னை விமர்சிக்க எதிரிகளிடம் எப்போது எல்லாம் எதுவும் இல்லையோ அவர்கள் உடனே எனது சாதியை இழுக்க தொடங்கிவிடுவார்கள். தலைவர்களின் சிந்தனையில் தான் சாதி உள்ளது. மக்களிடம் இல்லை.

    விதர்பா மண்டலத்தை சேர்ந்த முன்னாள் மந்திரி சந்திரசேகர் பவன்குலேவுக்கு இந்த முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டது. இதனால் விதர்பா கிழக்கு மண்டலத்தில் சில தொகுதிகளில் தோல்வியை தழுவினோம். மாநில தலைமை யாருக்கும் தேர்தலில் சீட் கொடுக்க கூடாது என பரிந்துரை செய்யவில்லை. நாங்கள் மீண்டும் எல்லோருக்கும் வாய்ப்பு கொடுக்கவே விரும்பினோம். ஆனால் கட்சியின் மத்திய நாடாளுமன்ற கமிட்டி சில மந்திரிகளுக்கு வாய்ப்பு கொடுக்க மறுத்துவிட்டது. இது மாநில தலைமையின் முடிவு கிடையாது.

    பா.ஜனதா தற்போதும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான கட்சி தான். சாதிய முறையில் பிரதமர் மோடிக்கு நம்பிக்கை கிடையாது. அவரே பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் தான். பா.ஜனதாவின் 105 எம்.எல்.ஏ.க்களில் 35 பேர் மராத்தா சமூகத்தை சேர்ந்தவர்கள், 37 பேர் பிற்படுத்தப்பட்டவர்கள், 18 பேர் எஸ்.சி., எஸ்.டி. பிரிவை சேர்ந்தவர்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×