search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    திரிபுராவில் சிறுமி கற்பழித்து எரித்து கொலை: வாலிபர்-தாயுடன் கைது

    திரிபுராவில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கற்பழித்து எரித்து கொன்ற வாலிபர்-தாயுடன் கைது செய்யப்பட்டார்.

    அகர்தாலா:

    உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ்வில் கற்பழிக்கப்பட்ட இளம் பெண்ணை குற்றவாளிகள் தீவைத்து எரித்தனர். இதில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    ஐதராபாத்தில் பெண் டாக்டரை கற்பழித்து கொன்று உடலை எரித்தனர். இச் சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பரபரப்புகள் அடங்குவதற்குள் அது போன்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

    திரிபுரா மாநிலம் ‌ஷன்திர் பஜார் பகுதியை சேர்ந்தவர் அஜோய் ருதர்பால். இவர் அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் நெருங்கி பழகினார்.

    அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை 2 மாதத்துக்கு முன்பு தனது வீட்டுக்கு அழைத்து சென்றார். இதனால் சிறுமியின் பெற்றோர் அஜோய் வீட்டுக்கு சென்று மகளை திருப்பி அனுப்பும் படி கேட்டனர். அதற்கு அஜோயும், அவரது தாயாரும் ரூ.30 ஆயிரம் கொடுத்தால் சிறுமியை திருப்பி அனுப்புவதாக கூறி உள்ளனர்.

    இது குறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கிடையே சிறுமியை அஜோய் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் அவரது நண்பர்களும் சிறுமியை கற்பழித்து உள்ளனர். இந்த கொடுமை 2 மாதங்களாக நடந்தது.

    இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர், அஜோய்யிடம் ரூ.17 ஆயிரம் மட்டுமே கொடுத்துள்ளனர்.

    ஆனால் ரூ.30 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே சிறுமியை திருப்பி அனுப்ப முடியும் என்று கூறி உள்ளார். பணம் கிடைக்காத ஆத்திரத்தில் சிறுமி மீது அஜோயும், அவரது தாயும் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து எரித்தனர். தீயில் கருகி அலறிய சிறுமியை பக்கத்து வீட்டுக்காரர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு 90 சதவீத தீக்காயம் ஏற்பட்டு இருந்தது.

    இதனால் சிகிச்சை பலனின்றி சிறுமி இறந்தாள். இதுபற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் அஜோய், அவரது தாயை சரமாரியாக தாக்கினார்கள். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அஜோய் மற்றும் அவரது தாயை மீட்டு கைது செய்தனர்.

    Next Story
    ×