search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நித்யானந்தா
    X
    நித்யானந்தா

    நான் பேசும் தமிழை புரிந்து கொள்ளாமல் வழக்கு போடுகிறார்கள்- நித்யானந்தா வெளியிட்ட புதிய வீடியோவில் பேச்சு

    தான் பேசும் தமிழை புரிந்து கொள்ளாமல் வழக்கு போடுவதாக நித்யானந்தா வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    பெங்களூர்:

    சாமியார் நித்யானந்தா மற்றும் அவரது ஆசிரமம் மீதான சர்ச்சைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் குஜராத் மாநிலம் அகமதாபாத் போலீசில் நித்யானந்தா மீது புகார் அளித்தார். அதில் எனது 4 மகள்களை பெங்களூரில் உள்ள நித்யானந்தாவின் கல்வி நிலையத்தில் சேர்த்திருந்தேன். அவர்களை அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்திற்கு கடத்தி வந்து சித்ரவதை செய்வதாக கூறியிருந்தார்.

    அதன்பேரில் போலீசார் ஆசிரமத்துக்கு சென்று விசாரணை நடத்தி ஜனார்த்தன சர்மாவின் 2 மகள்களை மீட்டனர். ஆனால், அவரது மூத்த மகள் லோபமுத்ரா, மற்றொரு மகள் நந்திதா ஆகியோர் பெற்றோருடன் செல்ல மறுத்தனர். அவர்களையும் மீட்டு தங்களிடம் ஒப்படைக்க கோரி ஜனார்த்தன சர்மா குஜராத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இதற்கிடையே மீட்கப்பட்ட குழந்தைகளிடம் நடத்திய விசாரணையில் நித்யானந்தா ஆசிரமத்தில் அவர்களை கட்டாயப்படுத்தி நிதி வசூல் செய்ய வைத்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து நித்யானந்தா மீது கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் ஆசிரம நிர்வாகிகளான சாத்வி பிரன்பிரியநந்தா, பிரியதத்வ ரித்தி கிரண் ஆகியோரை கைது செய்தனர். ஏற்கனவே நித்யானந்தா மீது கர்நாடகத்தில் கற்பழிப்பு வழக்கு ஒன்று உள்ளது. இந்த நிலையில் தன் மீது குஜராத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக நித்தியானந்தா வெளிநாடு தப்பி ஓடி விட்டதாக தகவல் வெளியானது.

    தற்போது அவர் அமெரிக்க கண்டத்தில் உள்ள கரீபியன் கடல் பகுதியில் 2 குட்டித்தீவுகளை உள்ளடக்கிய பிரினிடாட் அன்ட் டொபோகோ என்னும் நாட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது. அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் போலீசாரை கிண்டல் செய்து புதிய வீடியோவை நித்யானந்தா வெளியிட்டு உள்ளார். அதில் அவர் பேசி இருப்பதாவது:-

    நான் பேசும் தமிழ் யாருக்குமே புரியவில்லை. பேச்சை புரிந்து கொள்ளாமல் காவல்துறை என்மீது வழக்கு பதிவு செய்து விடுகிறார்கள். தமிழகத்தில் ஏதேனும் ஒரு பிரச்சனையை மடை மாற்ற வேண்டும் என்றால் அதற்கு என்னை மட்டுமே குறி வைக்கிறார்கள்.

    இவ்வாறு அந்த வீடியோவில் நித்யானந்தா பேசி உள்ளார்.

    பிரச்சனைகளுக்கு மேல் பிரச்சனை வந்தாலும் எத்தனை சர்ச்சைகளில் சிக்கினாலும் அதைபற்றி எதுவும் குறிப்பிடாமல் மவுனம் காத்துவந்த நித்யானந்தா தற்போது தன்மீது போலீசார் வழக்கு பதிவு செய்தவுடன் அவர்களை கண்டித்து பேசி இருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×