search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறப்பு தனிப்படையினர் தேடுதல் வேட்டை
    X
    சிறப்பு தனிப்படையினர் தேடுதல் வேட்டை

    சத்தீஸ்கர்: சிறப்பு படை வேட்டையில் 3 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்

    சத்தீஸ்கர் மாநிலத்தில் சிறப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 நக்சலைட்டுகள் இன்று சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    ராய்ப்பூர்:

    மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.

    பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, ஜார்கண்ட், மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்டுகளாகவும், மாவோயிஸ்ட்டுகளாகவும் நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.

    ஆயுதப் பயிற்சியில் நக்சலைட்டுகள்

    இவர்களை வேட்டையாட சிறப்பு தனிப்படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.

    அவ்வகையில், சத்தீஸ்கர் மாநிலத்துக்கு உட்பட்ட சுக்மா மாவட்டத்தில் மின்பா என்ற கிராமத்துக்கு அருகாமையில் உள்ள வனப்பகுதியில்  சிறப்பு தனிப்படையினர் இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு மறைந்திருந்த நக்சலைட்டுகள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். தனிப்படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் இரு நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.

    இதேபோல், புல்பாகடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முலேர் கிராமத்தின் அருகே தனிப்படையினரின் ரோந்து வாகனத்தின் மீது சில  நக்சலைட்டுகள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

    எதிர்தாக்குதலில் ஒரு நக்சலைட் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அந்நபரிடம் இருந்து ஒயர்லெஸ் கருவி மற்றும் துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×