search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகள்
    X
    பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகள்

    தெலுங்கானா - அரசு பஸ் ஊழியர்களின் போராட்டம் 50வது நாளை எட்டியது

    தெலுங்கானா மாநில பஸ் ஊழியர்களின் போராட்டம் இன்று 50-வது நாளை எட்டியுள்ள நிலையில், போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் நஷ்டத்தில் இயங்கி வரும் அரசு போக்குவரத்துக் கழகத்தை அரசுடன் இணைக்க வேண்டும், பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கடந்த மாதம் 5-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். 

    அரசு விதித்த காலக்கெடுவுக்குள் பணிக்கு திரும்பாத 48 ஆயிரம் பஸ் ஊழியர்களை தாங்களாகவே பதவி விலகியதாக அரசு எடுத்துக்கொள்ளும் என முதல்வர் சந்திரசேகர ராவ் அதிரடியாக அறிவித்தார். 
     
    ஆனாலும், ஊழியர்கள் பணிக்கு திரும்பாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்காலிக ஊழியர்கள், மாற்று நபர்களை வைத்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனையடுத்து போராட்டம் தீவிரமடைந்துள்ளது. 

    இந்நிலையில், போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 50-வது நாளை எட்டியுள்ளது. பணிமனை மற்றும் பல்வேறு இடங்களில் போராட்டம், மறியல், ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். 

    அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க பணிமனை முன்பு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    இதற்கிடையே, சுமார் 5100 வழித்தடங்களை தனியாருக்கு அளிக்க முடிவு செய்துள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது

    போராட்டம் 50வது நாளை எட்டியுள்ள நிலையில், அரசாங்கமும், கூட்டு நடவடிக்கை குழுவும் தங்கள் நிலைப்பாட்டில் பிடிவாதமாக உள்ளதால் போராட்டம் முடிவுக்கு வருமா? என மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×