search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக சிவசேனா
    X
    பாஜக சிவசேனா

    வாக்குறுதியை நிறைவேற்றாதவர்களின் வீழ்ச்சி தொடங்கி விட்டது: பாஜக மீது சிவசேனா தாக்கு

    வாக்குறுதியை நிறைவேற்றாதவர்களின் வீழ்ச்சி தொடங்கி விட்டது என பாரதீய ஜனதாவை சிவசேனா சாடி உள்ளது.
    மும்பை :

    மகாராஷ்டிராவில் சிவசேனாவின் ஆட்சியில் சமபங்கு கோரிக்கையை பாரதீய ஜனதா நிராகரித்ததை தொடர்ந்து, அடுத்தடுத்து ஏற்பட்ட அரசியல் திருப்பங்களுக்கு பின் அதிரடியாக ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலின் போதே இதுபற்றி இருகட்சிகளும் பேசி முடிவு எடுக்கப்பட்டதாக சிவசேனாவும், அப்படி எந்தவொரு வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை என பாரதீய ஜனதாவும் திட்டவட்டமாக தெரிவித்து வருகின்றன.

    தற்போது காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க சிவசேனா தீவிரம் காட்டி வருகிறது.

    இந்தநிலையில், சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ள தாவது:-

    மகாராஷ்டிரா மன்னர் சத்ரபதி சிவாஜி ஒரு சாதிக்கோ அல்லது ஒரு கட்சிக்கோ சொந்தமானவர் அல்ல. அவர் மராட்டியத்தின் 11 கோடி மக்களுக்கும் சொந்தமானவர். மன்னர் சத்ரபதி சிவாஜியால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரே கட்சி பாரதீய ஜனதா என அக்கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    ஆனால் பாரதீய ஜனதா சார்பில் சத்தாரா இடைத்தேர்தலில் போட்டியிட்ட உதயன்ராஜே போஸ்லே தோல்வியை தழுவினார். தேசியவாத காங்கிரசில் இருந்து விலகி பாரதீய ஜனதாவில் சேர்ந்த உதயன்ராஜே போஸ்லே சத்ரபதி சிவாஜியின் நேரடி வழிதோன்றல் ஆவார். இது ஒரு தனிப்பட்ட நபரின் தோல்வி. மரபு அல்ல. மராட்டியம் ஆணவத்தையும், பாசாங்குதனத்தையும் பொறுத்துக் கொள்ளாது.

    இதை மன்னர் சத்ரபதி சிவாஜி எங்களுக்கு கற்றுக் கொடுத்து உள்ளார். சத்ரபதி சிவாஜியின் பெயரில் உறுதிமொழி எடுத்துக் கொண்டவர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றாத போதும், தங்களையே ஆட்சியாளர்கள் என நினைத்து கொள்ளும் போதும் அதுவே அவர்களின் வீழ்ச்சிக்கான அறிகுறி ஆகும். அண்டை மாநிலம் குஜராத்தில் உலகிலேயே உயரமான சர்தார் வல்லபாய் சிலை நிறுவப்பட்டு விட்டது. ஆனால் இங்கு அரபிக்கடலில் மன்னர் சத்ரபதி சிவாஜி நினைவுச்சின்னம் அமைக்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×