search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோனியா காந்தி சரத்பவார்
    X
    சோனியா காந்தி சரத்பவார்

    மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக சோனியா காந்தியுடன் சரத்பவார் இன்று சந்திப்பு

    மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக சோனியா காந்தியுடன் இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் சந்தித்து பேசுகிறார்.
    மும்பை :

    மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணியில் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்துகொள்வதில் மோதல் வெடித்ததால் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தின் காரணமாக எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் உண்டானது. இதையடுத்து, கடந்த 12-ந்தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பாரதீய ஜனதாவிடம் முதல்-மந்திரி பதவி கேட்டு பிடிவாதம் செய்து கூட்டணியில் இருந்து விலகிய சிவசேனா தற்போது கொள்கை அளவில் வேறுபட்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முடிவு செய்து உள்ளது.

    இந்த கட்சிகள் ஆட்சி அமைப்பது தொடர்பாக குறைந்தபட்ச செயல்திட்டம் வகுத்து, ஆட்சியில் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது குறித்தும் பேசி முடித்து விட்டன.

    அதே நேரத்தில், பாரதீய ஜனதாவும் நாங்கள் விரைவில் ஆட்சி அமைப்போம் என கூறியது. அந்த கட்சி தேசியவாத காங்கிரசை இழுக்க திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது.

    ஆனால் இதை தேசியவாத காங்கிரஸ் மறுத்த சூழலில் திடீர் திருப்பமாக சிவசேனா தலைமையில் ஆட்சி அமைப்பதில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக பரபரப்பு தகவல் வெளியானது. ஆனால் இதை அக்கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் மறுத்தார்.

    இந்த நிலையில், நேற்று புனேயில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் வீட்டில் அந்த கட்சியின் உயர்மட்ட கூட்டம் நடந்தது. 2 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல், மூத்த தலைவர்கள் சகன் புஜ்பால், அஜித் பவார், ஜிஜேந்திர அவாத், நவாப் மாலிக், தனஞ்செய் முண்டே, சுப்ரியா சுலே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    சிவசேனா

    இந்த கூட்டத்துக்கு பின் தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தற்போது மாநிலத்தில் நிலவும் அரசியல் குழப்பம் குறித்து விவாதித்தோம். ஜனாதிபதி ஆட்சி உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். இதற்கு புதிய ஆட்சி அமைக்கப்பட வேண்டும். இது தொடர்பாக நாளை (இன்று) சரத்பவார் டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்து பேச உள்ளார்.

    இதைத்தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை (நாளை) எங்களது இரண்டு கட்சிகளின் மாநில தலைவர்கள் கூட்டம் நடக்கிறது. அதன்பின்னர்தான் ஆட்சி அமைப்பது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே நிருபர்களை சந்தித்த காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான், ‘‘காங்கிரஸ் மற்றும் சிவசேனா தலைவர்கள் கூட்டம் நாளை (இன்று) நடக்கிறது. அப்போது சிவசேனாவுடன் சேர்ந்து காங்கிரஸ் செயல்பட முடியுமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.

    சிவசேனாவின் மறைந்த தலைவர் பால்தாக்கரேயின் நினைவு நாளையொட்டி மும்பை தாதரில் உள்ள அவரது நினைவிடத்தில் நேற்று அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினார்கள்.

    அப்போது சிவசேனா மற்றும் பாரதீய ஜனதா தலைவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்வதை தவிர்த்தனர்.

    முன்னாள் முதல்-மந்திரி பட்னாவிஸ், பால்தாக்கரே நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய போது, ‘‘சிவசேனாவைச் சேர்ந்தவர்தான் அடுத்த முதல்-மந்திரி’’ என அக்கட்சி தொண்டர்கள் கோ‌‌ஷமிட்டதால் பரபரப்பு உண்டானது.

    முன் எப்போதும் பால்தாக்கரே நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த வராத தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் நேற்று பால்தாக்கரே நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

    ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் யாரும் அஞ்சலி செலுத்த வரவில்லை. அக்கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள் பால்தாக்கரேவுக்கு அஞ்சலி என டுவிட்டரில் பதிவிட்டு இருந்தனர்.
    Next Story
    ×