search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அயோத்தி நிலத்தின் ஒரு பகுதி
    X
    அயோத்தி நிலத்தின் ஒரு பகுதி

    அயோத்தி நிலம்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் - முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை

    சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் விரைவில் அளிக்கவுள்ள தீர்ப்பு அனைவராலும் மதிக்கப்பட வேண்டும் என முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
    புதுடெல்லி:

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ம பூமி பகுதியில் உள்ள 2.77 ஏக்கர் நிலம் சர்ச்சைக்குரியதாக உள்ளது. இந்த நிலத்தை சன்னி வக்பு போர்டு, நிர்மோகி அகாரா, ராம்லல்லா ஆகிய மூன்று அமைப்புகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன.

    இது தொடர்பாக முதலில் நீண்ட ஆண்டுகளாக அலகாபாத் கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. கடந்த 2010-ம் ஆண்டு அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்று அமைப்புகளும் சமமாக பிரித்துக் கொள்வது தொடர்பாக உத்தரவிடப்பட்டது.
     
    ஆனால், அலகாபாத் கோர்ட்டு தீர்ப்பை மூன்று அமைப்புகளும் ஏற்கவில்லை. டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக மேல் முறையீடு செய்யப்பட்டது. 14 அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த அப்பீல் மனுக்கள் அனைத்தும் ஒன்றாக விசாரிக்கப்பட்டது. இதற்கிடையே சமரச பேச்சு வார்த்தை நடத்தி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி ஓய்வு பெற்ற சுப்ரீம்கோர்ட்டு மூத்த நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, வாழும் கலை அமைப்பாளர் ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம்பஞ்சு ஆகிய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

    சர்ச்சைக்குரிய நிலம்

    இந்த குழு இந்துக்களையும், முஸ்லிம்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. 4 மாதங்களாக நடந்த சமரச பேச்சுவார்த்தை வெற்றி பெறாமல் தோல்வியில் முடிந்தது.

    அயோத்தி பிரச்சினை மேல்முறையீடு வழக்குகளை விரைந்து முடிக்க சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்தது. அதன்படி கடந்த ஆகஸ்டு 6-ம் தேதி முதல் தினசரி இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.

    40 நாட்களாக நடைபெற்ற வாதப் பிரதிவாதங்கள் அக்டோபர் 16-ம் தேதியுடன் நிறைவடைந்து, சுப்ரீம் கோர்ட் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பணி ஓய்வு பெறவுள்ள நவம்பர் 17-ம் தேதிக்குள் தீர்ப்பு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து, தீர்ப்பின்போது அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க முன்னேற்பாடாக அயோத்தி
    நகரம் மற்றும் உத்தர பிரதேசம் மாநிலத்தின் பல பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அயோத்தி நிலம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் விரைவில் அளிக்கவுள்ள தீர்ப்பு அனைவராலும் மதிக்கப்பட வேண்டும் என முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    டெல்லியில் நேற்று முஸ்லிம் இயக்கங்களின் தலைவர்கள் பங்கேற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு அனைத்திந்தியா முஸ்லிம் மஜ்லிஸ்-இ-முஷாவராத் தலைமௌ தாங்கினார்.

    ஜாமியத் உலேமா-இ-ஹிந்த் இயக்கத்தின் தலைவர் அர்ஷத் மதானி, தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் வஜாஹத் ஹபிபுல்லா, முன்னாள் எம்.பி. ஷாஹித் சித்திக்கி, ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த் தலைவர் சதத்துல்லா ஹூசைனி மற்றும் பாராளிமன்ற உறுப்பினர்களான டாக்டர் ஜாவெத், இம்ரான் ஹசன்  உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    அயோத்தி தீர்ப்புக்கு பின்னர் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணிப் பாதுகாக்க அவர்கள் உறுதியேற்றனர்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் ’நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு அயோத்தி நிலம் தொடர்பான வழ்க்கின் தீர்ப்பை நாம் சாதகமான முறையில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    ஆத்திரமூட்டும் செயல்களுக்கு தூண்டுகோலாக இருக்காமல்  எந்த சூழ்நிலையையும் அமைதியாகவும் நிதானமாகவும் சகிப்புத்தன்மையுடனும் எதிர்கொள்ள வேண்டும் என நாட்டு மக்களை கேட்டுக்கொள்கிறோம்’ என்ற வாசகங்கள் அடங்கிய தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது.
    Next Story
    ×